Published : 22 Aug 2019 09:26 AM
Last Updated : 22 Aug 2019 09:26 AM

சமூக வலைதளங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்: பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை

பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுடன் ஆதார் எண் உள்ளி்ட்ட சுயவிவர குறிப்புகளை இணைக்கக் கோரி சென்னை, மும்பை மற்றும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி பேஸ்புக்நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதேபோல இதுதொடர்பாக பிற உயர் நீதிமன்றகங்ளில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கும் தடை கோரியுள்ளது.

இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் அட்டர்னிஜெனரல் கே.கே.வேணுகோபால் ‘தனது வாதத்தில் இது ஒரு முக்கியமான வழக்கு. ஆதார் எண்ணை சமூக வலைதளங்களுடன் இணைத்தால் மட்டுமே ஆன்லைன் குற்றங்களை தடுக்க முடியும். ஆன்லைனில் பொய்யான செய்திகளை பரப்புவது, அவதூறாக சித்தரிப்பது, தேசவிரோத செயல்களில் ஈடுபடுவது, ஆபாச தளங்களை உலவ விடுவது என யார் வேண்டும் என்றாலும் எதை வேண்டும் என்றாலும் பரப்பலாம் என கடிவாளம் இல்லாத
சூழல் உள்ளது. ஆன்லைன் குற்றங்கள் பெருக இதுதான் மூலகாரணம். சமீபத்தில் ஆன்லைனில் பரவிய ப்ளூவேல் விளையாட்டால் பலஉயிர்களை பரிதாபமாக பறிகொடுக்க நேரிட்டது. எனவே இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க ஆதார் எண்ணை சமூக வலைதளங்களுடன் இணைப்பது மட்டுமே சரியானதாக இருக்கும். இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்
தில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தச் சூழலில் அந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கூடாது’ என வாதிட்டார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, கபில்சிபில் ஆகியோர் தங்களது வாதத்தில், ‘பேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவை சர்வதேச அளவில் சிறந்த தொழில்
நுட்பம் என்பதால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். பேஸ்புக் மூலமாகவே குற்றங்கள் பெருகி வருகின்றன என காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறியதை ஏற்க முடியாது. பேஸ்புக் மூலமாக நல்ல செயல்களும் நடந்து வருகின்றன. ஆதார் எண் இணைப்பது தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தால் ஒவ்வொரு நீதிமன்றமும் ஒவ்வொரு உத்தரவுகளை பிறப்பிக்க இயலும். அந்த குளறுபடிகளை தவிர்க்கவே இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோருகிறோம்’ என்றனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘தனிப்பட்ட ஒரு குற்ற வழக்குக்காக ஒட்டுமொத்தமாக சமூக வலைதளங்களை குறைகூற முடியுமா எனத் தெரியவில்லை. சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் ஆன்லைன் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டறியும் அரசின் சுதந்திரம் எந்தவகையிலும் பாதிக்கப்படக்கூடாது. எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசின்நிலைப்பாடு என்ன என்பது குறித்து பதிலளிக்க வேண்டும். அதேபோல எதிர்மனுதாரர்களும் பதிலளிக்க வேண்டும். அதுவரை இந்த வழக்குவிசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம், ஆனால் இறுதி முடிவு எடுக்கக் கூடாது’ என உத்தரவிட்டு விசாரணையை செப்.13-க்கு தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணி
யம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது பேஸ்புக் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி ஆஜராகி, ‘இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் வரை விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றார். அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், 'வழக்கு விசாரணையை தொடரலாம் என உத்தரவிட்டு உள்ளதால் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம்’ என்றார்.

நீதிபதிகள், ‘ஆதார் எண்ணை இணைக்கும் விவகாரத்துக்குள் நாங்கள் செல்லவில்லை. ஆனால் ஆன்லைன் குற்றங்களை தடுப்பது தொடர்பாகவே விசாரிக்கிறோம் எனக்கூறி விசாரணையை செப்.19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x