Published : 22 Aug 2019 07:41 AM
Last Updated : 22 Aug 2019 07:41 AM
சென்னை
ஆசிரியர் தகுதிக்கான 2-ம் தாள் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். ‘டெட்’ தேர்வு 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரையும் பாடம் நடத்த தகுதியுடையவர்கள். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் ‘டெட்’ தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு ஆசிரியர் தகுதிக்கான 2-ம் தாள் தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
‘டெட்’ 2-ம் தாள் தேர்வு விடைக்குறிப்புகள் கடந்த ஜூலை 9-ம் தேதி தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விண்ணப்பதாரர்களுக்கு 5 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டது. ஆட்சேபனை தெரிவித்த கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு, பின்னர் இறுதி விடைக்குறிப்புகள் வடிவமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, தற்காலிக மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தகுதி நிலையை நிறைவேற்றும் வகையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT