முன்ஜாமீன் மனு நிலுவையில் இருந்தாலும் ஒருவரை கைது செய்ய முடியும்: வழக்கறிஞர் என்.ரமேஷ் சட்ட விளக்கம்

முன்ஜாமீன் மனு நிலுவையில் இருந்தாலும் ஒருவரை கைது செய்ய முடியும்: வழக்கறிஞர் என்.ரமேஷ் சட்ட விளக்கம்
Updated on
1 min read

சென்னை

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்.ரமேஷ் கூறியதாவது:

பொதுவாகவே ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தன்னை கைது நடவடிக்கைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள, முன்ஜாமீன் மனு தாக்கல் செய்வதற்கு உரிமை உள்ளது. அதன்படி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 438 பிரகாரம் அவர் தனக்கு முன்ஜாமீன் கோரி நீதிமன்றங்களில் மனுதாக்கல் செய்ய முடியும்.

ஆனால், அதேநேரம் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டது என்றாலோ அல்லது முன்ஜாமீன் மனு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது என்றாலோ அவரை போலீஸார் கைது செய்ய எந்த தடையும் கிடையாது. அதேபோல முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் சம்பந்தப்பட்ட நபரை போலீஸார் உடனடியாக கைது செய்ய முடியும்.

ஆனால் முன்ஜாமீன் மனுவை விசாரிக்கும் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய தடை விதித்தால் மட்டுமே அவரை போலீஸார் கைது செய்ய முடியாது. ஒருவேளை முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பே போலீஸார் அவரை கைது செய்துவிட்டால், தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனு செல்லா நிலையாகி விடும். அதன்பிறகு அவர் தனக்கு ஜாமீன் கோரி முறைப்படி சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் இருந்து தான் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் சென்று பரிகாரம் தேட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in