Published : 21 Aug 2019 02:39 PM
Last Updated : 21 Aug 2019 02:39 PM

சிதம்பரம்  ‘தலைமறைவா? சுவர் ஏறிக் குதித்து ஃபியட் கார்ல ஓடியிருப்பார்’: எச்.ராஜா கிண்டல்

ப.சிதம்பரம் வழக்கு விவகாரத்தில் அவர் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில் பாஜக தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ட்விட்டரில் சிதம்பரத்தை கிண்டலடித்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்த போது, கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. 2018-ம் ஆண்டில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் தன்னைக் கைது செய்யாமல் இருப்பதற்கு முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுனில் கவுர் நேற்று தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது. ப.சிதம்பரத்தை கைது செய்யும் நோக்கில் நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை 4 முறை டெல்லியில் உள்ள அவரின் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. அவர் ஓடி ஒளிவதாக பாஜக ஆதரவாளர்கள் தலைவர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை தலைமை நீதிபதி அமர்வுக்கு நீதிபதி மாற்றியதும், தலைமை நீதிபதி அமர்வு உடனடியாக விசாரிக்க முடியாது என கூறியதாலும் வழக்கில் இழுபறி நீடிக்கிறது.

இதனிடையே சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்வார் என அமலாக்கத்துறை லுக்வுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதை சுப்ரமணியன் சுவாமி கிண்டலடித்து ட்வீட் செய்துள்ளார். அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்தது சரியான நடவடிக்கை என்பதுபோல் பதிவிட்டுள்ளார்.

இதேப்போன்று தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் சிதம்பரத்தை கிண்டல் செய்து ரத்தக்கண்ணீர் படப்பாடல் வரிகளான ‘குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்’ என்ற வரிகளை பதிவிட்டுள்ளனர்.

இதேப்போன்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை ‘மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை, சட்டம் படித்தவர் சட்டத்திற்கு பயந்து ஓடி ஒளிவது ஏன்?சிதம்பர ரகசியங்கள் அழகிரிக்கு தெரியாதா என்ன?’ என அழகிரி என்ன தவறு செய்தார் சிதம்பரம் என்று கேட்டதற்கு பதிலளித்து பதிவிட்டுள்ளார்.

இதேப்போன்று எச்.ராஜா சிதம்பரத்தின் முன் ஜாமீன் மறுப்பு குறித்த நீதிபதியின் பதிவை குறிப்பிட்டு ‘ப.சிதம்பரம் Scam Kingpin என்று டில்லி உயர்நீதிமன்றம். விசாரணையில் ஒத்துழைக்க மறுத்தார். மழுப்பலாக பதிலளித்தார் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே அவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் தான் உண்மை வெளிவரும்’ என பதிவிட்டுள்ளார்.

இதேப்போன்று சிதம்பரத்தை சிபிஐ, அமலாக்கத்துறை தேடி வருவது குறித்து குறிப்பிட்டு ‘தலைமறைவா? சுவர் ஏறிக் குதித்து ஃபியட் கார்ல ஓடியிருப்பார்’ என கிண்டலடித்து பதிவிட்டுள்ளார்.

இதற்கெல்லாம் பதிலடி தரும்விதமாக சுப.வீரபாண்டியன் ‘ப.சிதம்பரம் கைது ஆவாரா, மாட்டாரா என்பது பற்றியே எல்லோரும் பேச வேண்டும். காஷ்மீர் பற்றியோ, திமுக நடத்தும் ஆர்ப்பாட்டம் பற்றியோ யாரும் பேசி விடக் கூடாது. இதுதான் மோடி வித்தை! #PChidambaram #DMK #Kashmir என பதிவிட்டுள்ளார்.

அமலாபாலுக்கு எவ்வளவு தைரியம்!: வசுந்தரா பேட்டி - வீடியோ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x