Published : 21 Aug 2019 12:25 PM
Last Updated : 21 Aug 2019 12:25 PM
மதுரை,
போலி எப்ஐஆர் பதிவு செய்து இழப்பீடு பெற்ற வழக்கில் தொழிலாளர் நலத்துறை அதிகாரி உட்பட 6 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை, உசிலம்பட்டி காவல் நிலையங்களில் விபத்து நடந்ததுபோல் போலியாக வழக்குப்பதிவு செய்து இழப்பீடு பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி கடந்த 2004-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில் மதுரை தல்லாகுளம் மற்றும் உசிலம்பட்டி காவல் நிலையங்களில் விபத்து நடக்காமலே விபத்து நடந்தது போல் வழக்குப்பதிவு செய்து இழப்பீடு பெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர், மதுரை தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் சந்திரன், டாக்டர் பாண்டியராஜன், வக்கீல் சந்தோஷ், அப்போதைய எஸ்.ஐ.,க்கள் வீரணன், ராமச்சந்திரன் மற்றும் பாலமுருகன் உள்ளிட்ட 6 பேர் மீதும் வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கை விசாரித்துவந்த மதுரை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) தீர்ப்பளித்து. அதில் 6 பேருக்கும் தலா இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து நீதிபதி வடிவேல் தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT