Published : 21 Aug 2019 11:35 AM
Last Updated : 21 Aug 2019 11:35 AM

அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடுக: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதல்வர் பழனிசாமியிடம் மனு

சென்னை

அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதான தொடர்ச்சியான நடவடிக்கையை கைவிட வேண்டும் என, ஜாக்டோ ஜியோ அமைப்பினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் வலியுறுத்தியுள்ளனர்.

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று (ஆக.21) நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அம்மனுவில், "பொதுமக்கள், மாணவர் நலன் கருதியும் அரசுப் பணிகள் முடங்குவதால் அரசுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டும் வேலைநிறுத்தத்தை கடந்த 30-01-2019 அன்றே கைவிட்டு பணியேற்கச் சென்ற நிலையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்களின் மீதான தொடர்ச்சியாக தாக்குதல் நடைபெறுகிறது.

முதல்வர் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை நேரில் அழைத்துப் பேசி, போராட்ட காலத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்கள் மீதான நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்து, தமிழக அரசுக்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்களுக்கும் உள்ள சுமூகமான உறவினை நிலைநிறுத்தி மக்கள் பணியாற்றிட வழிவைகை செய்திட வேண்டும்.

திரும்பிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்களில் தற்போது வரை17-பி குற்றச்சாட்டு 5068 நபர்களுக்கு வழங்கப்பட்டும் பணி மாறுதலில் 1600 நபர்களும் உட்பட்டுள்ளனர்.

பணிக்குத் திரும்பிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்கள், அதிகாரிகளின் நடவடிக்கையினால் பின்வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதனை தங்களின் கனிவான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்", என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதான தொடர்ச்சியான நடவடிக்கையை கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததாக, ஜாக்டோ ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x