Published : 20 Aug 2019 08:14 PM
Last Updated : 20 Aug 2019 08:14 PM

பரமக்குடி அருகே கார்- பைக் மோதி விபத்து; மலேசிய தொழிலதிபர் உள்ளிட்ட 4 பேர் மரணம் 

ராமநாதபுரம்,

பரமக்குடி அருகே நடந்த விபத்தில் மலேசிய தொழிலதிபர், அவரது 2 மகள்கள் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர். மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பியபோது இந்த சோகம் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் உஸ்மான் அலி (55). இவர் தனது குடும்பத்துடன் மலேசியாவில் தங்கி உணவகம் நடத்தி வருகிறார். இவருக்கு ராமநாதபுரத்தில் திருமண மஹால் உள்ளிட்ட வணிகக் கட்டிடங்களும் உள்ளன.

உஸ்மான் அலி, அவரது மகள்கள் ஐனுல் அர்சியா (35), தஸ்லிமா பானு (37), மருமகன் (ஐனுல் அர்சியாவின் கணவர்) முகமது ஹசாலி (40) ஆகிய நான்கு பேரும், மலேசியாவில் இருந்து விமானம் மூலம் நேற்று மதியம் மதுரை விமான நிலையம் வந்துள்ளனர். அங்கிருந்து உறவினரின் காரில் சொந்த ஊரான சாத்தான்குளத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.

மாலை 5 மணியளவில் பரமக்குடி சோமநாதபுரம் அருகே நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதியது. அதனையடுத்து சாலையில் இருந்த சுவரிலும் கார் மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பரமக்குடி மணிநகரைச் சேர்ந்த திமுக பிரமுகர் சங்கர்(53), காரில் இருந்த உஸ்மான் அலி, அவரது மகள்கள் ஐனுல் அர்சியா, தஸ்லிமா பானு ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

முகமது ஹசாலி பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். காரை ஓட்டிவந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார், காயமின்றி தப்பி ஓடிவிட்டார். எமனேஸ்வரம் போலீஸார் மற்றும் பொதுமக்கள் காயமடைந்த முகமது ஹசாலியை மிகவும் சிரமப்பட்டு மீட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசிய தொழிலதிபரான உஸ்மான் அலி குடும்பத்தில் 3 பேர் உயிரிழந்ததால் சாத்தான்குளம் மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள அவர்களது உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x