Published : 20 Aug 2019 03:39 PM
Last Updated : 20 Aug 2019 03:39 PM

பாபநாசம், சேர்வலாறு மணிமுத்தாறு அணைகளிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை

பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து நாளை தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று (ஆக.20) வெளியிட்ட அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய் நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய் மற்றும் கோடகன் கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று 21.8.2019 முதல் 9.9.2019 முடிய 1,000 மில்லியன் கனஅடி தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். மேற்கண்ட கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை ஆகிய வட்டங்களில் உள்ள கிராமங்களில் உள்ள கால்நடை மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.

மற்றும் 24,090 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்" என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x