Published : 20 Aug 2019 02:09 PM
Last Updated : 20 Aug 2019 02:09 PM

எழுவர் விடுதலை; தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

ஆயுள் தண்டனைக் கைதிகள்

சென்னை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேர் விடுதலை தொடர்பாக அனுப்பிய தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என, தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீநிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயகுமார், நளினி ஆகிய ஏழு பேரை விடுவிக்கக் கோரி, கடந்த பிப்ரவரி மாதத்தில் அரசுக்கு நளினி மனு அனுப்பினார். அந்த மனுவைப் பரிசீலித்து, தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவுக்குப் பதிலளித்த தமிழக அரசு, முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என மனுதாரர் உரிமை கோர முடியாது எனவும், அது அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது எனவும் தெரிவித்திருந்தது.

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அமர்வில் இன்று (ஆக.20) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் தமிழக அரசு கேட்டறிய வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 361-ன் படி, தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மேல் நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x