Published : 20 Aug 2019 12:53 PM
Last Updated : 20 Aug 2019 12:53 PM

பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக் கோரி நளினி வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை,

மகளின் திருமண ஏற்பாட்டுக்காக தனது பரோலை மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க உத்தரவிடக் கோரி நளினி தாக்கல் செய்துள்ள மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ஏழு பேரில் நளினி ஒருவர். இவரது கணவர் முருகனும் இதேபோன்று தண்டனை அனுபவித்து வருகிறார். நளினியின் மகள் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது.

தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக ஆறு மாதம் பரோல் கோரி கடந்த பிப்ரவரி மாதம் நளினி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் விசாரித்தனர். இந்த வழக்கில் நளினி தானே ஆஜராகி வாதாடினார்.

பரோல் வழக்கில், அரசு விதிக்கும் நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டுமென்ற அறிவுறுத்தலுடன் ஒரு மாத பரோல் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஜூலை 25-ம் தேதி வேலூர் சிறையிலிருந்து நளினி பரோலில் வெளியில் வந்தார்.

வேலூர் சத்துவாச்சாரியில் தங்கி மகளின் திருமண ஏற்பாடுகளைக் கவனித்து வருகிறார் நளினி. இந்நிலையில் மகள் லண்டனிலிருந்து தமிழகம் வருவதில் தாமதம் காரணமாக திருமண ஏற்பாடுகள் முடிவடையாத நிலையில் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக் கோரி தமிழக அரசிடமும், சிறைத் துறையிடமும் ஆகஸ்ட் 8-ம் தேதி நளினி மனு அளித்தார்.

இந்நிலையில், அவரது மனு கடந்த 13-ம் தேதி அரசால் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து, அரசின் நிராகரிப்பு உத்தரவை ரத்து செய்து, பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி புதிதாக ஒரு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நளினி மனு குறித்து அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x