Last Updated : 19 Aug, 2019 05:47 PM

 

Published : 19 Aug 2019 05:47 PM
Last Updated : 19 Aug 2019 05:47 PM

கொடைக்கானலில் எஞ்சியிருக்கும் இயற்கை வளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:  உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை,

எஞ்சியிருக்கும் கொடைக்கானல் இயற்கை வளத்தைப் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக ஓட்டல் கழிவுகளை நகருக்கு வெளியே எடுத்துச் செல்வது, சீசன் காலங்களில் மலையடிவாரத்திலேயே வாகனங்களை நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடைக்கானல் நகராட்சியில் புதிய மாஸ்டர் பிளான் அமல்படுத்தப்படும் வரை விதிமீறல் கட்டிடங்களுக்கு சீல் வைப்பது, இடிப்பது போன்ற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் நீதிபதிகள் என்.கிருபாகரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு இன்று (திங்கள்கிழமை) பிறப்பித்த உத்தரவில், "கொடைக்கானல் பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அனுமதிக்க முடியாது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான பூமியை நாம் விட்டுச்செல்ல வேண்டும்.

சுற்றுச்சூழல் பிரச்சினை காரணமாக கொடைக்கானலில் செயல்பட்டு வந்த பாதரசத் தொழிற்சாலை 2001-ல் மூடப்பட்டது. ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், விதிமீறல் கட்டிடங்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் 2004-ல் உரிய உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் அந்த உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை.

தற்போது கொடைக்கானல் நகராட்சி புதிய மாஸ்டர் பிளான் அமலுக்கு வந்துள்ளது. புதிய மாஸ்டர் பிளான் அரசின் இணையளத்தில் மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள கொடைக்கானலில் இயற்கை வளத்தைப் பாதுகாக்க வேண்டும். இதற்காக கொடைக்கானல் ஓட்டல் கழிவுகளை கொடைக்கானல் பகுதியில் கொட்டுவதைத் தடுக்க வேண்டும். கழிவுகளை கொடைக்கானலுக்கு வெளியே கொண்டுசெல்ல வேண்டும். கழிவுகளை நகருக்கு வெளியே எடுத்துச் செல்லும் செலவுகளை ஓட்டல் நிர்வாகங்கள் ஏற்க வேண்டும். சீசன் காலங்களில் வாகனங்களை மலையடிவாரத்திலேயே நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் 6 மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு நடத்தி கொடைக்கானலில் விதிமீறல் கட்டிடங்கள் இல்லை என்பதை உறுதி செய்து உயர் நீதிமன்றப் பதிவாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் விதிமீறல் இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது பொதுமக்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உரிமை வழங்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x