Last Updated : 19 Aug, 2019 05:38 PM

 

Published : 19 Aug 2019 05:38 PM
Last Updated : 19 Aug 2019 05:38 PM

கல்வியில் முழுமையாக வளர்ச்சியடைந்த மாவட்டமாக தேனி உருவாகும்:  ஓபிஎஸ் பேச்சு

தேனி,

அடுத்த 5 ஆண்டுகளில் கல்வியில் முழுமையாக வளர்ச்சியடைந்த மாவட்டமாக தேனி உருவாகும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் நலத்திட்டம் வழங்கும் விழாவில் பேசினார்.

தேனி பழனிசெட்டிபட்டியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (ஆக.19) நடைபெற்றது. ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உழைக்கும் மகளிர்க்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின்கீழ் 702 மகளிர்க்கு ரூ.175லட்சம் மதிப்பிலான மானியத்தொகைஉள்ளிட்ட பல நலத்திட்டங்களை வழங்கினார்.

விழாவில் அவர் பேசும்போது, "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு நீண்ட காலம் பயன்தரும் திட்டங்களை தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தினார். அதன்படி அவரது எண்ணங்களை இந்த அரசும் திறம்பட செயல்படுத்தி வருகிறது.

ஜெயலலிதா ஆட்சியில்தான் தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தற்போது ஒருவாரத்தில் அரசு சட்டக்கல்லூரியும் நிறுவப்பட உள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் கல்வியில் முழுமையாக வளர்ச்சியடைந்த மாவட்டமாக தேனி உருவாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

2023-க்குள் குடிசையில்லாத மாநிலமாக தமிழகம் உருவாவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் நிதியாண்டிலும் தேனி மாவட்டத்தில் ஆயிரத்து 776 மானியவிலை இருசக்கர வாகனம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குருவிக்கு கூட சொந்த கூடு உண்டு. எனவே மனிதர் எவரும் வீடில்லாத நிலை இருக்கக் கூடாதுஎன்று அதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது" என்று பேசினார்.

பெண்கள் ஹெல்மெட் அணிய வேண்டும்..

பெண்களுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கிப் பேசிய அவர், "மகளிரின் வேலைச்சுமையைக் குறைக்கும் வகையில் தற்போது மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது. பெண்களுக்கு பல்வேறு பணிகள் இருந்தாலும் வாகனங்களை இயக்கும்போது மிகுந்த கவனமுடன், போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும். கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும். இடதுபுறம் செல்வதுடன், வலது புறம் திரும்பும்போது நின்று நிதானமாக கடக்க வேண்டும்" என்று அறிவுரை கூறினார்.

தொடர்ந்து, 177 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட மொத்தம் 744 பயனாளிகளுக்கு ரூ.181.7லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணைமுதல்வர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்டிகே.ஜக்கையன், கோட்டாட்சியர் சி.ஜெயப்பிரித்தா, உதவிஆட்சியர்(பயிற்சி) எஸ்.பாலசந்தர், மகளிர் திட்ட அலுவலர் ம.சிவக்குமார், வட்டாட்சியர்கள் செந்தில்முருகன், உதயராணி, பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் எஸ்பிஎம்.சையதுகான், ஆர்.பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நேற்று மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்ற குடிமராமத்துப்பணிகளை பார்வையிட்டு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x