Published : 18 Aug 2019 11:27 AM
Last Updated : 18 Aug 2019 11:27 AM

பலமுறை பழுதான புதிய செல்போனால் அவதி; விற்பனை நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்:  நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

கோவை

மீண்டும் மீண்டும் பழுதான புதிய செல்போனால் அவதிக்குள்ளான வாடிக்கையாளருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என விற்பனை நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை உப் பிலிபாளையத்தைச் சேர்ந்த எம்.பிரீத்தி மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2015 நவம்பர் 15-ம் தேதி சோனி நிறுவன செல்போனை பீளமேட்டில் உள்ள பிரபல செல்போன் விற்பனை கடையில், ரூ.34,990 செலுத்தி வாங்கினேன். அதற்கு ஓராண்டு காலம் வாரண்டி அளித்தனர். இந்நிலையில், நவம்பர் 21-ம் தேதி திடீரென செல்போன் வேலை செய்யவில்லை. இதையடுத்து, கடைக்காரரிடம் புகார் தெரிவித்தேன். அவர், காந்தி புரம் கிராஸ்கட் சாலையில் உள்ள சோனி நிறுவனத்தின் அங்கீகரிக்கப் பட்ட பழுதுபார்ப்பு மையத்தில் செல்போனை ஒப்படைக்குமாறு தெரிவித்தார். அங்கு நவம்பர் 23-ம் தேதி ஒப்படைத்தபோது, மென்பொருள் அப்டேட் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றனர்.

பின்னர், அந்த மென்பொருளை அப்டேட் செய்துவிட்டதாகவும், இனி பிரச்சினை ஏற்படாது எனவும் தெரிவித்தனர். ஆனால், அடுத்த 3 மணி நேரத்துக்குள் மீண்டும் அதே (Error) பிரச்சினை ஏற்பட்டது. பின்னர், அதே பழுதுபார்ப்பு மையத் தில் செல்போனை ஒப்படைத்தேன். அப்போது, பிரச்சினையை சரிசெய்ய வேண்டுமெனில் செல்போனின் மதர் போர்டை மாற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். செல்போன் வாங்கிய சில நாட்களில் இந்த பிரச்சினை ஏற்பட்டதால், எனக்கு புதிய செல்போனை அளிக்குமாறு தெரிவித்தேன். அதை ஏற்றுக்கொண்ட பழுது பார்ப்பு மையத்தினர், செல்போனை ஒருவாரத்துக்குள் மாற்றித் தருவ தாக தெரிவித்தனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி மாற்றித் தராமல் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வந்தனர்.

தொடர் முயற்சிக்கு பிறகு, டிசம்பர் 19-ம் தேதி செல்போனை மாற்றித் தந்தனர். ஆனால், புதிய செல்போனிலும் அதே பிரச்சினை ஏற்பட்டது. எனவே, செல்போனுக்காக என்னிடமிருந்து பெறப்பட்ட ரூ.35 ஆயிரத்தை திருப்பி அளிக்கவும், சேவை குறைபாடு, எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் விற்பனை நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றத்தின் தலைவர் ஏ.பி.பாலசந்திரன், உறுப்பினர் ஆர்.டி.பிரபாகர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: செல்போனில் மீண்டும், மீண்டும் பழுது ஏற்பட்டது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, செல்போன் தயாரிப்பு நிறுவனம், விற்பனை நிறுவனம் ஆகியவை இணைந்து ரூ.34,990-ஐ மனுதாரருக்கு திருப்பி அளிக்க வேண்டும். அதோடு, மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம், வழக்குச் செலவாக ரூ.3 ஆயிரத்தை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x