Published : 17 Aug 2019 11:15 AM
Last Updated : 17 Aug 2019 11:15 AM
சென்னை,
சமூக நீதியின் உறுதிமிக்க குரலாக ஒலிக்கும் திருமாவளவன் எம்.பி.க்கு 57-வது பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு இன்று 57-வது பிறந்த நாள். இந்நிலையில் அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''சமத்துவம் மற்றும் சமூக நீதியின் உறுதிமிக்க குரலாக நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் பாசத்திற்குரிய சகோதரர் - சிறந்த பண்பாளர் - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.க்கு 57-வது பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மனமகிழ்ச்சி கொள்கிறேன்.
சமுதாயத்தில் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காகவும், அவர்தம் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும், அப்பழுக்கற்ற மதச்சார்பின்மைக்காகவும், ஆரோக்கியமான ஜனநாயகம் தொடர்ந்து செழுமை அடைய வேண்டுமென்பதற்காகவும், இளம் வயதிலிருந்தே இடதுசாரிச் சிந்தனையுடன் குரல் கொடுத்து வரும் திருமாவளவன், தலைவர் கலைஞர் மீதும், என் மீதும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், லட்சியங்களின் அடிப்படையிலும் தனிப்பட்ட முறையிலும், அளப்பரிய பற்றும் பாசமும் வைத்திருப்பவர்.
சோதனைகளைச் சாதனைகளாக்கும் தனித்திறன் படைத்த அவர், பொதுவாழ்வில் மேலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்திடவும், தொடர்ந்து மேலும் பல உயரங்களை அடைந்திடவும், அவர் பல்லாண்டு காலம், உடல் நலத்துடனும் மன வளத்துடனும் நிறைவுடனும், வாழ எனது இதய பூர்வமான வாழ்த்துகள்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT