Published : 17 Aug 2019 10:04 AM
Last Updated : 17 Aug 2019 10:04 AM

புதுச்சேரியின் இரண்டு அறிவியல் மன்றங்களுக்கு தேசிய அளவில் பாராட்டு: தங்கச் சான்றிதழ் பிரிவில் கவுரவிப்பு

புதுச்சேரி,

புதுச்சேரியின் இரு அறிவியல் மன்றங்களுக்கு தேசிய அளவில் பாராட்டு கிடைத்து, தங்கச் சான்றிதழ் பிரிவில் கவுரவிக்கப்பட்டுள்ளது.

மாணவரின் முழுமையான வளர்ச்சிக்குப் பயன்படும், அறிவியல் சார்ந்த பல செயல்பாடுகளை மேற்கொள்ளும் ஓர் அமைப்பே அறிவியல் மன்றம். மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பு தேசிய அளவில் 280க்கும் அதிகமான அறிவியல் மன்றங்களை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இதில் புதுவையிலும் 8 மன்றங்கள் இடம் பெற்றுள்ளன.

ஆண்டுதோறும் அறிவியல் செயல்பாடுகளைப் பொறுத்து மன்றங்களைத் தர நிர்ணயம் செய்து கவுரவிப்பது வழக்கம். தேசிய அளவில் நடைபெறும் இந்நிகழ்ச்சியானது நடப்பாண்டு குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் அர்பித் பன்னாட்டுப் பள்ளியில் ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி அறிவியல் இயக்க செயலர் முனைவர் அருண் நாகலிங்கத்தின் ஹர்கோபிந்த் குரானா அறிவியல் மன்றம் மற்றும் காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர் நிலைப் பள்ளி ஆசிரியர் ராஜ்குமாரின் வேம்பு அறிவியல் மன்றம் ஆகிய இரண்டு மன்றத்தினர் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டனர்.

இந்த இரு அறிவியல் மன்றங்களுக்கு தேசிய அளவில் தங்கச் சான்றிதழ் வகையில் தேர்வாகிப் பாராட்டப்பட்டன. அதைத்தொடர்ந்து கடந்த ஓராண்டு நடத்திய நிகழ்வுகளை வகைப்படுத்திக் கண்காட்சியாக வைக்கப்பட்டு இவற்றில் தேசிய அளவில் முனைவர் அருண் நாகலிங்கத்தின் ஹர்கோபிந்த் குரானா அறிவியல் மன்றம் சிறப்புப் பாராட்டையும் பெற்றது.

விஞ்ஞான் பிரசார் அமைப்பின் இயக்குனர் நகுல் பராசர், விப்னெட் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் ரணடே, குஜராத் கல்வி அமைச்சர் புபேந்திர சிங் சுடசாமா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுப் பரிசுகளை வழங்கினர்.

விருது பெற்றது தொடர்பாக அருண் நாகலிங்கம், ஆசிரியர் ராஜ்குமார் கூறுகையில், "நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான அறிவியல் மன்றங்கள் பங்கேற்ற சூழலில் புதுச்சேரியில் இரு மன்றங்களுக்கு தங்கச் சான்றிதழ் விருது கிடைத்தது பெருமைக்குரியது. அதைத் தொடர்ந்து அங்குள்ள பள்ளிகளுக்குச் சென்று மடிப்பு நுண்ணோக்கி பற்றியும் நழுவுப் படக் காட்சிகளையும் அங்குள்ள குழந்தைகளுக்கு விளக்கினோம். ஆசிரியர்களுக்கும் பயிற்சி தந்தோம்" என்று குறிப்பிட்டனர்.

-செ. ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x