Published : 16 Aug 2019 01:55 PM
Last Updated : 16 Aug 2019 01:55 PM
தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வழங்க முடியும். தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் மொழி பெயர்த்து வழங்க முடியாது என உயர் நீதிமன்ற கிளையில் மத்திய அரசு சாரபில் தெரிவிக்கப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பகவத்சிங், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை அரசியலமைப்பு அட்டவணை அங்கீகரித்துள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும். பின்னர் அந்தந்த மாநில மக்களிடம் கருத்து கேட்டறிந்து தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை ) விசாரணைக்கு வந்தபோது, தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை பார்வையற்றவர்கள், செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் முழுமையாக படிப்பதற்கு சிறப்பு வசதிகள் செய்யப்படவில்லை. கருத்து கேட்பு கூட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் பார்வையற்றோர், செவித்திறன் குறைபாடுடையவர்களும் தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை படிக்க போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என தீபக் நாதன் என்பவர் புதிய மனுவை தாக்கல் செய்தார்.
மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை ஆங்கிலம், இந்தியில் வழங்கப்பட்டுள்ளது. பிற மாநில மொழிகளில் அதனுடைய சுருக்கம் மொழிபெயர்த்து வழங்கப்பட்டுள்ளது. வரைவு அறிக்கையை முழுமையாக அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து வழங்க வேண்டுமென்பது தேவையற்றது. பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்றார்.
இதையடுத்து தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை பார்வையற்றோர், செவித்திறன் குறைபாடுடையோர் படிப்பதற்கான சிறப்பு வசதிகள் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப். 19-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT