Published : 16 Aug 2019 01:26 PM
Last Updated : 16 Aug 2019 01:26 PM

மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 30,000 கன அடியாக குறைந்தது

மேட்டூர் அணையில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் நீர், படம்: இ.லக்‌ஷ்மி நாராயணன்

சேலம்

மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 30,000 கன அடியாக குறைந்தது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதையடுத்து, பாதுகாப்பு கருதி இரு அணைகளில் இருந்தும் விநாடிக்கு, 3 லட்சம் கனஅடி வரை நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. தற்போது இரு அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்துள்ளதால், தண்ணீர் திறப்பின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணராஜசாகர் அணையில் நீர் நிரம்பியிருக்கும் நிலையில், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18,500 கன அடியாக உள்ளது. அந்த அணையில் இருந்து காவிரிக்கு விநாடிக்கு 19,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதேபோல, கபினி அணையும் நிரம்பியிருக்கும் நிலையில், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12,650 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 8,000 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளில் இருந்தும் விநாடிக்கு மொத்தமாக 27,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளுக்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழை பெய்து நீர் திறப்பு அதிகரிக்கும் போது, நீர்வரத்து அளவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 12-ம் தேதி மாலை விநாடிக்கு 2 லட்சத்து 30,000 கனஅடியாக இருந்தது. அணையின் நீர்மட்டமும் 103 அடியாக உயர்ந்தது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10,000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாயில் 500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து, இன்று (ஆக.16) காலை நிலவரப்படி, விநாடிக்கு 30,000 கனஅடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 111.81 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 81.01 டிஎம்சியாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x