Published : 16 Aug 2019 07:14 AM
Last Updated : 16 Aug 2019 07:14 AM

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருது; கடையம் தம்பதிக்கு அதீத துணிவு விருதுடன் ரூ.2 லட்சம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் பழனிசாமி வழங்கினார்

சென்னை 

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருது, மீன்வளத் துறை உதவி இயக்குநர் ரம்யா லட்சுமிக்கு கல்பனா சாவ்லா விருது, கடையத்தைச் சேர்ந்த தம்பதியருக்கு அதீத துணிவுக்கான விருதுடன் ரூ.2 லட்சம் பரிசையும் முதல்வர் பழனிசாமி சுதந்திர தின நிகழ்ச்சியில் வழங்கினார்.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் பழனிசாமி நேற்று காலை தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அதன்பின், பல்வேறு விருதுகள், பதக்கங்களை வழங்கினார். அந்த வகையில், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் விருது, இந்த ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத் தலைவர் கே.சிவனுக்கு அறிவிக் கப்பட்டது. அவர் நேரடியாக இந்த விருதைப் பெற இயலாததால், மற்றொரு நாளில் அவருக்கு முதல்வர் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இவ்விருது ரூ.5 லட்சத்துக்கான காசோலை மற்றும் 8 கிராம் தங்கப்பதக்கம், சான்றிதழ் கொண்டதாகும்.

தொடர்ந்து, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை, மடிவலை பயன்பாட்டை தடுத்ததற்காக மீன்வளத் துறை உதவி இயக்குநர் ப.ரம்யாலட்சுமிக்கு முதல்வர் வழங்கினார். அதன்பின், முகமூடிக் கொள்ளையர்களைத் தாக்கி விரட்டியதற்காக நெல்லை மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த சண்முகவேல்-செந்தாமரை தம்பதி அதீத துணிவுக்கான முதல்வரின் சிறப்பு விருதைப் பெற்றனர். இந்த விருதுடன் ரூ.2 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

தம்பதியர் மகிழ்ச்சி

விருது பெற்ற செந்தாமரை கூறும்போது, ‘‘கணவரைத் தாக்கிய வர்கள் மீது நான் கையில் கிடைத் ததை வீசி எறிந்து விரட்டினேன். இந்த விருதைப் பெற்றது மகிழ்ச்சி யளிக்கிறது. எல்லோரும் தைரிய மாக இருக்க வேண்டும்’’ என்றார்.

அவரது கணவர் சண்முகவேல் கூறும்போது, ‘‘முதல்வரிடம் விருது பெற்றது உற்சாகமாக உள்ளது. சிசிடிவி கேமரா இருந்தது மிகவும் உதவிகரமாக இருந்தது. இல்லாவிட்டால் காவல் துறையினரிடம் நிகழ்வுகளை விளக்குவது மிகுந்த சிரமமாக இருந்திருக்கும். இது போன்று எல்லோரும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்’’ என்றார்.

நல்ஆளுமை விருது

இதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி, சென்னை மாநகரில் குற்றங்களைக் குறைக்க சிசிடிவி மற்றும் பேஸ் டேக்கர் என்ற செயலியை பயன்படுத்தியதற்காக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு முதல்வரின் நல் ஆளுமை விருதை வழங்கினார்.

மேலும், வேலூர் மாவட்டம் நாகநதி ஆற்றுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் புத்துயிர் அளித்ததற்காக ஊரக வளர்ச்சித் துறைக்கும், ஜிஎஸ்டி முறைக்கு தேவையான தகவல்களை வழங் கியதுடன், செல்போன் செயலியை உருவாக்கிய வணிகவரித் துறைக் கும் முதல்வரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளி குழந்தை களுக்காக சென்னை சாந்தோமில் இன்ஃபினிட்டி பூங்கா அமைத்த சென்னை மாநகராட்சி பூங்கா துறைக்கு நல் ஆளுமைக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலன்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது வேப் பேரி ஆபர்சூனிட்டி அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக் கான பள்ளிக்கு வழங்கப்பட்டது. சிறந்த மருத்துவர் விருது கோவை முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை நிறுவன இயக்குநர் செ.வெற்றிவேல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வீ.ரமாதேவி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எவரெஸ்ட் ஸ்டெபிலைசர் நிறுவ னத்துக்கும், சிறந்த சமூக பணியாளர் விருது திருவான்மியூர் பாத்வே செபின் இணை நிறுவனர் சந்திரா பிரசாத்துக்கும், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருது, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவனுக்கும் வழங் கப்பட்டது.

மகளிர் நலனுக்கு சிறப்பாக தொண்டாற்றிய சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருதை போதி மரம் தொண்டு நிறுவனத்துக்கும், சிறந்த சமூக பணியாளருக்கான விருதை எம்.சூசை மரியானுக்கும் முதல்வர் வழங்கினார்.

உள்ளாட்சி அமைப்புகள்

சிறப்பாக செயல்பட்ட உள் ளாட்சி அமைப்புகள் வரிசையில், சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சிக்கு ரூ. 25 லட்சம் வழங்கப்பட்டது. சிறந்த நகராட்சிக் கான முதல் பரிசு தருமபுரிக்கும் (ரூ.15 லட்சம்), 2-ம் பரிசு வேதாரண் யத்துக்கும் (ரூ.10 லட்சம்), 3-ம் பரிசு அறந்தாங்கிக்கும் (ரூ.5 லட்சம்) வழங்கப்பட்டன.

சிறந்த பேரூராட்சிக்கான முதல் பரிசு மதுரை மாவட்டம் டி.கல்லுப் பட்டிக்கும், 2-ம் பரிசு திருவாரூர் மாவட்டம் நன்னிலத்துக்கும், 3-ம் பரிசு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சிக்கும் வழங்கப்பட்டன.

முதல்வரின் மாநில இளைஞர் விருதுகளில் ஆண்கள் பிரிவில் நாமக்கல்லைச் சேர்ந்த பெ.நவீன் குமார், திண்டுக்கல்லைச் சேர்ந்த மு.ஆனந்த்குமார் ஆகியோருக் கும், பெண்கள் பிரிவில் மதுரை மாவட்டம் ர.கலைவாணி ஆகியோ ருக்கும் விருதுகளை வழங்கி முதல்வர் பழனிசாமி பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x