Published : 15 Aug 2019 01:29 PM
Last Updated : 15 Aug 2019 01:29 PM

காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு சிறந்த ஆளுமைக்கான விருது: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

சென்னை,

சென்னை முழுவதும் கண்காணிப்பு கேமரா நிறுவியதன் மூலம் குற்றச்செயல்கள் குறையக் காரணமாக இருந்தது, காவல் துறையில் நவீன வரவுகளைப் புகுத்தியது உள்ளிட்ட சாதனைகளுக்காக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு சிறந்த ஆளுமைக்கான விருதை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

சென்னையில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு குற்றங்கள் திடீரென அதிகரித்தன. முதல் முறையாக குற்றச்செயலில் ஈடுபடும் இளைஞர்கள் பெருகினர். பைக் திருட்டு, வழிப்பறி அதிகரித்ததால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்ட செயின் பறிப்புச் சம்பவங்கள் நடந்தன.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் குற்றங்களைத் தடுக்கும் விதமாக மூன்றாவது கண் எனும் திட்டத்தைக் கொண்டுவந்தார். இதன் மூலம் நகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், சிறு வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வலியுறுத்தப்பட்டது.

காவல் ஆணையரின் கோரிக்கையை ஏற்று பலரும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவினர். இன்னும் பலர், தெருக்கள், சாலைகளில் காவல் துறை கண்காணிப்பு கேமரா அமைக்க உதவி செய்தனர். காவல்துறையும் சென்னையின் முக்கியச் சாலைகள், சிக்னல்கள், தெருக்களில் சிசிடிவி கேமராக்களை அமைத்தது.

இதுதவிர தி.நகர் துணை ஆணையர் அரவிந்தன் முன்னெடுத்த ஃபேஸ் டாக்கர் எனும் செயலியை காவல்துறையில் அமல்படுத்த காவல் ஆணையர் ஊக்கப்படுத்தினார். இதனால் ஒவ்வொரு காவலரின் செல்போனிலும் குற்றவாளிகள் புகைப்படம் குற்றச்செயல்கள் அடங்கிய தகவல்களுடன் கூடிய செயலி அமைக்கப்பட்டது.

இதனால் வாகனச்சோதனையில் எளிதில் குற்றவாளிகளை இனம்காண முடிந்தது. இதுதவிர காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி பெண்கள் மற்றும் முதியவர்களுக்குப் பெரிதும் உதவும் செயலியாக உள்ளது. போக்குவரத்து காவல் துறையில் நவீன கருவிகளை அமல்படுத்தியதன் மூலம் நேரடியாகப் பணம் வாங்குவது நிறுத்தப்பட்டு லஞ்சப் புகாருக்குத் தீர்வு காணப்பட்டது.

சிசிடிவி காட்சிகள் மூலம் இன்று சென்னையில் இரண்டு விஷயங்கள் நடக்கின்றன. 1. குற்றம் செய்தால் சிக்கிக் கொள்வோம் என குற்றச்செயல்களில் ஈடுபடுவது குறைந்துள்ளது. 2. குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கிக் கொள்வதால் பல சிக்கலான வழக்குகள் எளிதாக முடிந்தன.

மேற்கண்ட நடைமுறைகளை தனது பணிக்காலத்தில் சென்னையில் நிறுவிய சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு சிறந்த ஆளுமைக்கான விருது பரிந்துரைக்கப்பட்டது.

இன்று சுதந்திர தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறந்த ஆளுமைக்கான விருதை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு வழங்கினார். அப்போது சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதியும் உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x