

காஞ்சிபுரம்
அனந்தசரஸ் புஷ்கரணியில் இருந்து வெளியே வந்து வசந்த மண்டபத்தில் காட்சியளிக்கும் அத்திவரதருக்கு உஷ்ணம் ஏற்பட்டு முகத்தில் இருந்து வியர்வை வடிவதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அத்திவரதர் வைபவத்தின் 45-வது நாளான நேற்று இளஞ்சிவப்பு நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சி அளித்தார்.
இந்நிலையில் அத்திவரதர் முகத்தில் வியர்வை வடிவதாக பக்தர்கள் மத்தியில் தகவல் பரவியது. இத்தகவல் தற்போது சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது. இதனால், அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் சயனிக்க வேண்டிய ஏற்பாடுகளை கோயில் மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைவுபடுத்த வேண்டும் என பக்தர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து முதியவர் ஒருவர் கூறும்போது, கோயில் மண்டபத்தின் வெப்பம் காரணமாகக்கூட இப்படி சுவாமிக்கு வியர்க்கக் கூடும் என்றார்.