Published : 14 Aug 2019 03:54 PM
Last Updated : 14 Aug 2019 03:54 PM

பெரியாரை தமிழ்த்தேசியத்தின் எதிரியாக திரிக்கும் வேலை: எதிரிகளுக்கே உதவும்: வீரமணி எச்சரிக்கை

சென்னை

பெரியார் கூறும் ஆரிய எதிர்ப்பைத் தவிர்த்துவிட்டு தமிழ்த் தேசியத்தை மட்டும் முன்னெடுத்தால் இந்துத்துவாவாதிகள் அறுவடை செய்திடுவர் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (ஆக.14) வெளியிட்ட அறிக்கையில், "திராவிடம் தமிழுக்கு எதிரி, திராவிடம் பேசுவோர் தமிழர் விரோதி என்று சிலரைக் கிளப்பி விட்டுள்ளனர். திராவிடம் என்பது வெறும் நிலப்பரப்பாகுமா? அது அழியாத சமத்துவம், சுயமரியாதை என்பதுதான் திராவிடம்.

மீள் வரலாற்றை அது மட்டும் தான் தர முடியும். ஆரியத்தை வீரியத்துடன் வீழ்த்துவது என்பது புரியாததனால் சில அப்பாவிகள் பெரியார் ஊட்டிய தமிழ்த் தேசிய உணர்வை திசைத் திருப்பி எதிரிகளை நண்பர்களாகவும், நண்பர்களை எதிரிகளாகவும் எண்ணி ஏமாறும் பரிதாப நிலை இருக்கிறது. அதுதான் மிகப்பெரும் ஆபத்து என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அண்மையில் அரண் என்கிற ஆய்வாளர் எழுதிய "ஆர்எஸ்எஸ் இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்" என்ற ஒரு சிறு நூலில் இது வெகு தெளிவாகப் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.

"ஆர்எஸ்எஸ் இந்துத்துவ பாசிச அமைப்பு, தமிழ்நாட்டில் மிகத் தந்திரமாக காலூன்றி வருகிறது. கபடி, சிலம்பாட்டம், ஜல்லிக்கட்டு போன்ற தமிழர் வீர விளையாட்டுக்களை வைதீக இந்து மரபுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது.

திருவள்ளுவர், வள்ளலார், அம்பேத்கர் போன்ற ஆளுமைகளை இந்து வட்டத்துக்குள் அடைப்பது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பல கூட்டங்களில் வேட்டி கட்டுதல் போன்ற தமிழரின் தனித்த பண்பாட்டை தன்வயப்படுத்தும் முயற்சியைத் தீவிரமாக செய்து வருகிறது.

தமிழ்நாட்டின் சிற்பங்கள், கோயில்கள், பக்தி இலக்கியங்கள், தொல்லியல், வரலாறு அனைத்தையும் தனக்குள் சேர்க்கப் பார்க்கிறது. இப்படித்தான் ஆரிய-வேத-சமஸ்கிருதப் பண்பாடு இந்திய துணைக் கண்டத்தின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கிக் கொண்டது.

தமிழ்த் தேசியத்தின் அடையாளமாக சொல்லப்படும் அனைத்தும் ஆரிய வேத மரபின் நீட்சியாக உருவாக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.

ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பால் விழுங்க முடியாத ஒரே சக்தியாக பெரியார் நம் மண்ணில் நிற்கிறார். அவரின் ஆரிய எதிர்ப்பைத் தவிர்த்து விட்டு தமிழ்த்தேசிய கூறுகளைக் கட்டமைக்க முயற்சித்தால் இந்துத்துவ சக்தியால் எளிமையாக அறுவடை செய்யப்படுவோம்.

இதைத் தெளிவாக உணர்ந்த இந்துத்துவ சக்திகள் பெரியாரை தமிழ்த்தேசியத்தின் எதிரியாக திரிக்கும் வேலையை 2013 ஆம் ஆண்டில் இருந்து மிகத் தீவிரமாக செய்து வருகின்றன. இதைப் புரிந்து கொள்ளாமல் இன்றைய அரசியலை ஆராய முடியாது.

இந்திய துணைக் கண்டத்தில் ஆரியர் அல்லாத ஒரு நாகரிகத்தின் அடையாளமாக விளங்கும் தமிழ்த்தேசிய இன மக்களின் மீது வீசப்படும் இந்துத்துவ திரிசூலத்தை பெரியாரின் கைத்தடி இல்லாமல் ஒருபோதும் எதிர் கொள்ளமுடியாது."

இந்த எச்சரிக்கை காலத்தின் தேவை; ஏமாந்தால் இனம், மொழி, பண்பாடு நாகரிகம், சமத்துவம் எல்லாம் அழியும்", என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x