Published : 14 Aug 2019 02:52 PM
Last Updated : 14 Aug 2019 02:52 PM
சென்னை
2019-ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி 16 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.
வருடந்தோறும், சுதந்திர தினத்தன்று, சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு பதக்கங்கள் வழங்குவது வழக்கம். இந்நிலையில், நாளை இந்தியா முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அதனையொட்டி, காவல்துறை அதிகாரிகள் 16 பேருக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்க இன்று (ஆக.14) முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார்.
அந்த ஆணையில், பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, கூடுதல் காவல்துறை இயக்குநர் ப. கந்தசுவாமி, கூடுதல் காவல் ஆணையாளர் தினகரன், காவல் ஆய்வாளர் ஜா. நாகராஜன், காவல் ஆய்வாளர் சி.செந்தில்குமார், பெண் தலைமைக் காவலர் சா. டெய்சி உள்ளிட்ட 6 பேருக்கு தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
அதேபோன்று புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களும் வழங்கப்பட உள்ளது.
அதன்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ். வனிதா, காவல் துணைக் கண்காணிப்பாளர் டி. புருஷோத்தமன், காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். கிருஷ்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளர் வ. அசோகன், காவல் ஆய்வாளர் எஸ். கிரிஸ்டின் ஜெயசில், காவல் ஆய்வாளர் ப. காசிவிஸ்வநாதன், காவல் ஆய்வாளர் ஏ. ஞானசேகர், காவல் ஆய்வாளர் கோ. அனந்தநாயகி, காவல் ஆய்வாளர் து. நடராஜன், காவல் ஆய்வாளர் பி. தேவி உள்ளிட்ட 10 பேருக்கு சிறப்புப் பணிப் பதக்கங்கள் வழங்கப்பட இருக்கின்றன.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT