Last Updated : 14 Aug, 2019 01:56 PM

 

Published : 14 Aug 2019 01:56 PM
Last Updated : 14 Aug 2019 01:56 PM

அத்தி வரதரைத் குடும்பத்துடன் வழிபட்ட திமுக எம்எல்ஏ மஸ்தான்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள அத்தி வரதரை, செஞ்சி திமுக எம்எல்ஏ மஸ்தான் குடும்பத்துடன் வந்து தரிசித்தார். அத்தி வரதர் அனைவருக்கும் பொதுவானவர் என மஸ்தான் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவத்தில் நாற்பத்தி நான்காவது நாளாக வசந்த மண்டபத்தில் அத்தி வரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். அத்தி வரதர் வைபவம் நிறைவு பெற 3 நாட்களே உள்ளதால் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் வரதராஜப் பெருமாள் கோயிலைச் சுற்றி 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் நேற்று குவிந்தனர். பொது தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர். காஞ்சிபுரத்துக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில், மாற்று மதத்தினரும் அத்தி வரதரை ஆர்வத்தோடு தரிசித்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியின் திமுக எம்எல்ஏ மஸ்தான் அவரது குடும்பத்துடன் அத்தி வரதரை தரிசித்து வணங்கிச் சென்றார்.மேலும் அவர் கூறுகையில், ''அத்தி வரதர் அனைவருக்கும் பொதுவானவர். அதுமட்டுமில்லாமல் மக்கள் பிரதிநிதியாக அனைத்து மத நிகழ்ச்சிகளிலும் நான் பங்கேற்று வருகிறேன். அத்தி வரதரை மீண்டும் 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தரிசிக்க முடியும் என்பதால், அவரைக் குடும்பத்துடன் தரிசித்தேன்'' என்று தெரிவித்தார்.

இதேபோல கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் அத்திவரதரைத் தரிசித்தார். அப்போது அவர், கோயிலுக்கு சாதாரணமாகத்தான் இங்கு வந்தேன். காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் நடைபெறுகிறது. அதைப் பார்க்க வந்தேன். மக்கள் கூடக் கூடிய இந்த இடத்தில் என்ன செய்கிறார்கள், எப்படி விழா நடைபெறுகிறது, இதில் ஏன் நாமும் கலந்துகொள்ளக் கூடாது என்று வந்தேன் என்று தெரிவித்திருந்தார்.

அத்திவரதரை ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் ஆகியோர் முன்னதாகத் தரிசித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x