Published : 15 May 2014 10:07 AM
Last Updated : 15 May 2014 10:07 AM

குடும்ப ஓய்வூதியத்தில் 2-வது மனைவிக்கும் பங்கு உண்டு: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், 2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு கணவரின் குடும்ப ஓய்வூதியத்தில் பாதியைப் பெறுவதற்கு உரிமை உண்டு என உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

கன்னியாகுமரி-கீழகல்குறிச் சியைச் சேர்ந்த விசாலாட்சியம்மாள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

என் கணவர் ஸ்தானுத்தான் தம்பிக்கும் எனக்கும் 1958-ல் திருமணம் நடைபெற்றது. 2 மகள்கள் உள்ளனர். முதன்மைக் கல்வி அதிகாரியான எனது கணவர் என்னை விவாகரத்து செய்யாமலேயே 1965-ம் ஆண்டு வசந்தகுமாரி தங்கச்சி என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். என் கணவர் 2012 செப். 13-ம் தேதி இறந்தார். அவரின் இறப்புக்குப் பிறகு வசந்தகுமாரிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டது. என்னை விவாகரத்து செய்யாத நிலையில் குடும்ப ஓய்வூதியம் பெற 2-வது மனைவிக்கு சட்டப்படி உரிமை கிடையாது. எனவே, எனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன் பிறப்பித்த உத்தரவு: திருமணம் செய்யாமலும், வசந்தகுமாரியும், ஸ்தானுத்தான் தம்பியும் 47 ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். பாசம் காரணமாக வசந்தகுமாரியை வாரிசுதாரராக நியமித்துள்ளார். அவருக்கும் குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. இறந்தவரின் குடும்ப ஓய்வூதியத்தை அவர் மனைவிக்கும், அவருடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணுக்கும் பிரித்து வழங்கலாம். கணவன் இறந்த பிறகு மனைவி சௌகரியமாக வாழவே குடும்ப ஓய்வூதியம் தரப்படுகிறது. இந்த வழக்கில் குடும்ப ஓய்வூதியத்தை மனுதாரருக்கும், வசந்தகுமாரி தங்கச்சிக்கும் சரிசமமாகப் பிரித்து வழங்க வேண்டும். யாராவது ஒருவர் இறந்துவிட்டால் உயிருடன் இருப்பவருக்கு முழு குடும்ப ஓய்வூதியத் தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x