Published : 13 Aug 2019 05:51 PM
Last Updated : 13 Aug 2019 05:51 PM
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என உரிமை கோர முடியாது. விடுவிக்கும் முடிவை எடுப்பது அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்குட்பட்டது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழக உள்துறைச் செயலாளர் சார்பிலும், வேலூர் மகளிர் சிறைக் கண்காணிப்பாளர் சார்பிலும் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு அளித்த பரிந்துரை, தமிழக ஆளுநரின் பரிசீலினையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது அரசின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது எனத் தெரிவித்துள்ள தமிழக அரசு, ஆயுள் கைதிகள் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என உரிமை கோர முடியாது என்றும், ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுக்க சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்வது, தண்டனைக் குறைப்பு போன்ற மாநில அரசு அதிகாரத்தை நீதிமன்றங்கள் செயல்படுத்த முடியாது என்றும், முன்கூட்டி விடுதலை செய்வது குறித்துப் பரிசீலிக்கும்படி மட்டுமே அரசுக்கு உத்தரவிட முடியும் என்றும் நளினியை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, சரவணன் அமர்வு, வழக்கை ஆகஸ்ட் 20-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT