Published : 13 Aug 2019 12:24 PM
Last Updated : 13 Aug 2019 12:24 PM

நீலகிரியின் சேதப் பகுதிகளை மகனுடன் சேர்ந்து பார்வையிட்ட ஓபிஎஸ்

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று உதகை வந்தார்.

நீலகிரி மாவட்டத்தில் மழை நேற்று ஓய்ந்தது. உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெயிலான காலநிலை நிலவியது. சேதங்களை ஆய்வு செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நீலகிரி மாவட்டம் வந்தார்.

ஊட்டியில் உள்ள தமிழக விருந்தினர் மாளிகையில் மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஓபிஎஸ், மாவட்ட மழை சேத விவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். அவருடன் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, எம்.பி. ரவீந்திரநாத் மற்றும் அனைத்துத் துறை அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ''மழை சேதங்களை ஆய்வு செய்து, கணக்கிட்டு விரைவில் நிவாரணம் வழங்கப்படும். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அரசைக் குற்றம் சாட்டுவதே நோக்கமாக இருக்கிறது. நீலகிரியில் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால்தான் சேதங்கள் குறைந்தன'' என்றார் ஓபிஎஸ்.

முன்னதாக, நீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ''தமிழக அரசு குறைந்தபட்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு எடுத்திருந்தால் இப்படிப்பட்ட சூழல் வந்திருக்காது. இனிமேலும் இவ்வாறு மெத்தனமாக இருக்காமல், பணிகளை முடுக்கிவிட வேண்டும்.

திமுக இங்கு பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை வழங்கியிருக்கிறது. ஆனால், ஆளும் அரசு பெயருக்கு ஓரிரு அமைச்சர்களை அனுப்பி வைத்திருக்கிறது. அந்த அமைச்சர்களும், பப்ளிசிட்டிக்காக வந்துவிட்டு, பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாக ஆராயாமல், மக்களைச் சந்திக்காமல் சென்றிருக்கின்றனர்'' என்று குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x