

தமிழக பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரி கள், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் மேலாண்மை கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் எம்பிஏ., எம்சிஏ. படிப்புகளில் 2019-2020-ம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான மாநில அளவிலான கலந்தாய்வு கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி யில் நடைபெற உள்ளது.
இதற்கான தரவரிசைப் பட்டியலை அரசு தொழில் நுட்பக் கல்லூரி முதல்வரும், தமிழ்நாடு எம்பிஏ., எம்சிஏ. மாணவர் சேர்க்கை செயலர் பெ.தாமரை வெளியிட்டார். எம்பிஏ படிப்பில் டான்செட் மதிப்பெண் 82 பெற்ற பொள்ளாச்சி மாணவி எஸ்.ஸ்வரூபா முதலி டமும், 81.333 மதிப்பெண் பெற்ற சென்னையைச் சேர்ந்த ஏ.கார்த்திபிரியா 2-ம் இடம், 79 மதிப்பெண் பெற்ற பி.பிரசன்னகுமார் 3-ம் இடம் பெற்றனர். எம்சிஏ படிப்பில் 73.667 மதிப்பெண் பெற்ற சென்னை மாணவி எஸ்.அர்ச்சனா முதலிடமும், 72.667 மதிப்பெண் பெற்ற மதுரை மாணவி ஜெ.தர்ஷினி 2-ம் இடம், 66 மதிப்பெண் பெற்ற சென்னை மாணவர் ஏ.பிரதீப்ராம் 3-ம் இடம் பெற்றனர்.
இதுகுறித்து பெ.தாமரை கூறியதாவது: எம்சிஏ படிப்புக்கு, வரும் 17-ம் தேதி சிறப்புப் பிரிவு, 18 முதல் 20-ம் தேதி வரை பொதுப்பிரிவுக்கு கலந்தாய்வு நடக் கும். எம்பிஏ படிப்புக்கு 21-ம் தேதி சிறப்புப் பிரிவு, 22 முதல் 28-ம் தேதி வரை பொதுப்பிரிவுக்கு கலந்தாய்வு நடக்கும். தரவரிசையில் இடம் பிடித்த மாணவர்கள் அழைப்பு கடிதத்தை www.gct.ac.in மற்றும் www.tn-mbamca.com ஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்வு பட்டியலையும் பெறலாம்.
மாணவர்கள் அனைத்து சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும். பொதுப்பிரிவினர் ரூ.5,300, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.1,150 கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.