Published : 12 Aug 2019 06:21 PM
Last Updated : 12 Aug 2019 06:21 PM
சிபிஎஸ்இயில் படிக்கும் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களின் புதிய தேர்வுக் கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ''மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வுக் கட்டணத்தை SC/ST மாணவர்களுக்கு பன்மடங்கு அதாவது 50 ரூபாயிலிருந்து 1,200 ரூபாயாகவும், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு 750 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் உயர்த்தியிருப்பது வேதனையளிக்கின்றது.
கல்வியை அரசாங்கமே இலவசமாக வழங்க வேண்டும். ஆனால் கூடுதல் சுமையாக, குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் இந்தத் தலைமுறையில்தான் முன்னேற்றம் கண்டு வருகையில் அவர்களுக்கு 2019-20 ஆம் கல்வியாண்டில் இதுவரை இருந்து வந்த தேர்வுக் கட்டணம் ரூ.50-ல் இருந்து 24 மடங்காக உயர்த்தியது மட்டுமில்லாமல் . கூடுதல் பாடத்தில் கட்டணமில்லாமல் தேர்வு எழுதியவர்களுக்கு புதிதாக ஒரு பாடத்திற்கு 300 ரூபாய் கட்டணமும், உயர்த்தியிருப்பது அதிர்ச்சியளிக்கின்றது. இதே போன்று பொதுப்பிரிவினருக்கும் 150 ரூபாய்க்குப் பதில் 300 ரூபாய் உயர்த்தியிருப்பதும் ஏற்புடையதல்ல.
மத்தியக் கல்வி வாரியத்தின் கீழ் படிக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டிய தேர்வுக்கட்டணம் நிர்ணயம் செய்வது வழக்கம். குறிப்பாக 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 9 ஆம் வகுப்பிலும், 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 11 ஆம் வகுப்பிலேயே தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தி விட்டனர். ஆனால் தற்போது வெளியிட்டுள்ள தேர்வுக்கான புதிய கட்டணத்தின்படி மீதித் தொகையினை செலுத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
எனவே ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் கல்விக்கட்டணம் தொடரவும், புதிய கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறவேண்டியும் மத்தியக் கல்வி வாரியத்தை, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT