Published : 10 Aug 2019 02:38 PM
Last Updated : 10 Aug 2019 02:38 PM

திமுக ஆட்சியில் கேபிள் யார் கட்டுப்பாட்டில் இருந்தது?- ஸ்டாலினுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கேள்வி

திருப்பூர்

அரசு கேபிள் மூலம் குறைந்த விலையில் கேபிள் கனக்‌ஷன் கிடைப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் மு.க.ஸ்டாலின், தன்னைப்பற்றி பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாக, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

திருப்பூர் நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கையும், மாவட்டத்தில் செய்யப்பட்ட முன்னேற்பாடுகளள் குறித்தும் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று (சனிக்கிழமை) பார்வையிட்டார்.

திருப்பூர் மங்கலம் சாலை மற்றும் கல்லூரி சாலையை இணைக்கக்கூடிய அணைப்பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியதை ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நொய்யல் கரையோரம் உள்ள பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

உடுமலை சின்னாறு பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் மலைவாழ் குடியிருப்பு மக்கள் ஆற்றைக் கடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேம்பாலம் அமைப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. விரைந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

அக்ஷயா என்னும் தனியார் கேபிள் நிறுவனத்தை நடத்துவதாக ஸ்டாலினின் வெளியிட்ட அறிக்கை குறித்து கேட்டதற்கு, "தமிழக அரசு குறைந்த விலையில் கேபிள் இணைப்பு வழங்க இருக்கும் சூழ்நிலையில் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் இதுபோன்ற பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். தற்போது தனியார் கேபிள் உரிமத்திற்கு இணையம் மூலமாகவே உரிமம் பெறபட்டு வருவதால் அக்ஷயா கேபிள் நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்பதை அதன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.

அதிமுக ஆட்சி இல்லாத காலத்தில் தமிழகத்தில் கேபிள் யார் கட்டுப்பாட்டில் இருந்தது , எந்த அளவு இருந்தது என்பதையும் ஸ்டாலின் நினைத்துப் பார்க்க வேண்டும்", என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பதிலளித்தார்.

மேலும், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் குற்றச்சாட்டு குறித்துக் கேட்டதற்கு, ''அதற்கு பதிலளிக்க விரும்பவில்லை'' என தெரிவித்து விட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x