Published : 09 Aug 2019 05:14 PM
Last Updated : 09 Aug 2019 05:14 PM
வேலூர் தொகுதியில் கிடைத்துள்ள வெற்றி, பணபலத்தைத் தாண்டிய வெற்றி என்றும் இது ஸ்டாலின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் அடையாளம் என்று பொன்முடி, துரைமுருகன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பாக கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர். நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி போட்டியிட்டார்.
கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வேலூர் தொகுதியில் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கியது. முதல் 6 சுற்றுகளில் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்த நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில், கதிர் ஆனந்த் முன்னிலையில் இருந்தார்.
இறுதிச்சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,119 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய திமுக மூத்த தலைவர் பொன்முடி, ''இதை ஓர் இடைத் தேர்தலாகவே எண்ண வேண்டும். எதிர்க்கட்சியாக நாங்கள், ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்றுள்ளோம். இதுவே பெரிய விஷயம். வாக்கு வித்தியாசங்கள் குறைந்திருக்கலாம். ஆனால் மத்திய அரசு, மாநில அரசு, பண பலம் ஆகியவற்றைத் தாண்டித்தான் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இவை எல்லாம் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டும் வெற்றி கிடைத்திருக்கிறது.
இது அதிமுகவுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய தோல்வி. பொதுவாக கடந்த காலங்களில் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும். அதை முறியடித்து திமுக சாதனை படைத்திருக்கிறது'' என்றார் பொன்முடி.
அதேபோல வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்தின் தந்தையும் திமுக பொருளாளருமான துரைமுருகன் கூறும்போது, ''எந்தவொரு வெற்றியையும் சாதாரணமாக நினைக்க முடியாது. அதேபோலத்தான் இந்த வெற்றியும். சிறுபான்மையினர் எப்போதுமே திமுகவுக்குத்தான் ஆதரவாக இருக்கின்றனர். வாணியம்பாடி தொகுதியில் மக்கள் எங்களுக்கு அதிக வாக்களித்திருக்கின்றனர்.
இந்த வெற்றியை ஸ்டாலின் மீது மக்கள் மீண்டும் நம்பிக்கை கொண்டிருப்பதற்கான அடையாளமாகக் கருதுகிறோம்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT