Published : 09 Aug 2019 04:24 PM
Last Updated : 09 Aug 2019 04:24 PM

வேலூர் தேர்தல்: குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த ஏ.சி.சண்முகம்

வேலூர்

வேலூர் மக்களவைத் தொகுதித் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பாக கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர். நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி போட்டியிட்டார். கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி நிலவரப்படி, இத்தொகுதியில் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து, மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே அதிமுக முன்னிலை வகித்தது.

முதல் சுற்றின்படி, அதிமுக 25,719 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், 24,806 வாக்குகள் பெற்று திமுக இரண்டாம் இடமும், நாம் தமிழர் கட்சி 1269 வாக்குகளுடன் மூன்றாம் இடமும் வகித்தன. அதிமுக வாக்குகள் அடுத்தடுத்த சுற்றுகளில் படிப்படியாக உயர்ந்து, ஆறாவது சுற்றில் 5,227 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக ஒரு லட்சத்து 57,773 வாக்குகளுடன் முன்னிலை வகித்தது. அப்போது, திமுக ஒரு லட்சத்து 52,546 வாக்குகள் பெற்றது.

ஆனால், ஏழாவது சுற்றில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலைக்கு நகர்ந்தார். திமுக ஒரு லட்சத்து 81,331 வாக்குகளும், அதிமுக ஒரு லட்சத்து 80,715 வாக்குகளையும் பெற்றன. இறுதிச்சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,119 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகளைப் பெற்றார்.

திமுக 47.3% வாக்குகளையும், அதிமுக 46.51% வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 2.63% வாக்குகளையும் பெற்றது.

ஆரம்பத்தில் அதிமுக முன்னிலையில் இருந்தாலும், 8,141 வாக்குகளில் அக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வெற்றி வாய்ப்பை இழந்தார். தமிழகத்தில் வேலூர் தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களில், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதிமாறன் உள்ளிட்டோர் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஆனால், வேலூரில் கதிர் ஆனந்த் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x