Published : 28 Jul 2015 08:38 AM
Last Updated : 28 Jul 2015 08:38 AM

எஸ்ஆர்எம் பல்கலை. தமிழ்ப்பேராய விருதுகள்: தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் 10 பேருக்கு ரூ.19 லட்சம் பரிசு

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராய விருதுகள் சென்னை யில் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் 10 பேருக்கு ரூ.19 லட்சம் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இது தொடர்பாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து நேற்று பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்ப் படைப்பாளிகள், திறனாய்வாளர்கள், சாதனை புரிந்த பேரறிஞர்களை அங்கீகரிக்கும் வகையில் தமிழ்ப்பேராயம் சார்பில் விருது வழங்கி வருகிறோம். அந்த வகையில், இந்த ஆண்டு தமிழ்ப்பேராய விருதுக்கு 227 நூல்கள் வரப்பெற்றன. ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான தேர்வுக் குழுவினர் விருதுக்குரியவர்களை தேர்வுசெய்தனர்.

படைப்பிலக்கியம், கவிதை, அறிவியல் தமிழ், கவின் கலை உள்ளிட்ட விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தலா ரூ.1.5 லட்சமும், சிறந்த தமிழறிஞர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் பரிசாக வழங்கப்படும். விருது வழங்கும் விழாவை செப்டம்பர் முதல் வாரம் அல்லது 2-வது வாரத்தில் சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

புதிதாக தமிழில் எம்.ஏ. படிப்பை ஆன்லைனில் வழங்க முடிவுசெய்துள்ளோம். இதற்கான பாடத்திட்டம் தயாரிக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது.

இவ்வாறு பச்சமுத்து கூறினார்.

விருது பெறுவோர் விவரம்

1. புதுமைப்பித்தன் படைப்பிலக் கிய விருது - வண்ணதாசன்

2. பாரதியார் கவிதை விருது - இன்குலாப்

3. ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருது - ஆர்.சிவகுமார்

4. பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருது - மு.சிவலிங்கம்

5. ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது - ச.புகழேந்தி

6. முத்துத்தாண்டவர் தமிழிசை விருது - மார்க்ரெட் பாஸ்டின்

7. வளர் தமிழ் விருது - அ.மோகனா

8. விபுலானந்தர் படைப்பிலக்கிய விருது - ஸ்ரீதரன்

9. பரிதிமாற்கலைஞர் விருது - கு.வெ.பாலசுப்பிரமணியன்

10. பாரிவேந்தர் பைந்தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருது - அ.அ.மணவாளன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x