Published : 09 Aug 2019 10:47 AM
Last Updated : 09 Aug 2019 10:47 AM

வேலூர் தேர்தல்: ஒரு லட்சம் வாக்குகளைத் தாண்டி அதிமுக தொடர்ந்து முன்னிலை

வேலூர்

வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக ஒரு லட்சம் வாக்குகளைக் கடந்து முன்னிலை வகிக்கிறது.

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பாக கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர். நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி போட்டியிட்டார். கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி நிலவரப்படி, இத்தொகுதியில் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து, மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

வாக்கு எண்ணிக்கைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அறை வாயில், வாக்கு இயந்திரம் உள்ள பகுதிகளில் துணை ராணுவப் படையினர் பணியில் உள்ளனர். அடுத்த நிலையில், தமிழக ஆயுதப் படையினர், அதன்பிறகு வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் உள்ளூர் காவல் துறையினர் பணியில் உள்ளனர்.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே அதிமுக முன்னிலை வகித்தது. தபால் வாக்குகளில் அதிமுக 363 வாக்குகளும், திமுக 200 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 17 வாக்குகளும் பெற்றிருந்தன.

மூன்றாம் சுற்று நிலவரப்படி, அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 81,332 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 74,816 வாக்குகள் பெற்றிருந்தார்.

இந்நிலையில், நான்காம் சுற்று நிலவரப்படி, அதிமுக ஒரு லட்சத்து 9,959 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. திமுக 99,242 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 5761 வாக்குகளும் பெற்றுள்ளன. நோட்டாவுக்கு இதுவரை 1,918 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே 10,717 வாக்குகள் வித்தியாசம் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x