Published : 09 Aug 2019 10:10 AM
Last Updated : 09 Aug 2019 10:10 AM

வேலூர் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நிலவரம்; அதிமுக முன்னிலை

ஏ.சி.சண்முகம்: கோப்புப்படம்

வேலூர்

வேலூர் மக்களவைத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் , திமுக வேட்பாளரை விட, 5,386 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பாக கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி நிலவரப்படி, இத்தொகுதியில் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து, மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

வாக்கு எண்ணிக்கைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அறை வாயில், வாக்கு இயந்திரம் உள்ள பகுதிகளில் துணை ராணுவப் படையினர் பணியில் உள்ளனர். அடுத்த நிலையில், தமிழக ஆயுதப் படையினர், அதன்பிறகு வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் உள்ளூர் காவல் துறையினர் பணியில் உள்ளனர்.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதன்படி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில், அதிமுக 25,719 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தது. திமுக 24,806 வாக்குகள் பெற்றிருந்தது. நாம் தமிழர் கட்சி 1269 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் இருந்தது.

இதையடுத்து, இரண்டாம் சுற்றின்படி, அதிமுக 55,120 வாக்குகள் பெற்று மீண்டும் முன்னிலை வகித்தது. திமுக 49,734 வாக்குகள் பெற்று இரண்டாம் இடமும், நாம் தமிழர் கட்சி 2559 வாக்குகள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x