Published : 09 Aug 2019 08:11 AM
Last Updated : 09 Aug 2019 08:11 AM

ஆகஸ்ட் 16-ம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல்

காஞ்சிபுரம்

அத்திவரதர் தரிசனம் ஆகஸ்ட் 16-ம் தேதியுடன் நிறைவு பெறுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறினார்.

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஆட்சியர் பொன்னையா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது முக்கிய பிரமுகர்கள் தரிசனத்தை ஆகஸ்ட் 15-ம் தேதியுடனும், பொது தரிசனத்தை வரும் 16-ம் தேதி நள்ளிரவுடன் முடித்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலை யத் துறை மற்றும் அர்ச்சகர்களுடன் கலந்து ஆலோசித்து ஆகஸ்ட் 17-ம் தேதி தரிசனத்தை ரத்து செய்வது பற்றி முடி வெடுக்கப்பட்டது.

17-ம் தேதி சம்பிரதாயப்படி அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் வைக்க வேண்டி இருப்பதால் அதற்கான நடவடிக்கை எடுக் கப்பட உள்ளது. 16-ம் தேதி இரவு 10 மணிக்குள் கிழக்கு கோபுரத்துக்குள் எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் அத்திவரதரை தரிசிக்கலாம்.

இதுவரை 70 லட்சம் பேர் தரிசனம்

அத்திவரதரை கடந்த 38 நாட்களில் சுமார் 70 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். தமிழக முதல்வர் நேற்று முன்தினம் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் மக்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து தர அறிவுறுத்தியுள்ளார். அதன்படி ஏற்கெனவே உள்ள 1,200 சுகாதாரப் பணியாளர்களுடன் கூடுதலாக 500 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

அதே போன்று பாதுகாப்புப் பணியிலும் கூடுதல் போலீஸார் நியமிக்கப்படுவர். பக்தர்களின் வசதிக்காக மேலும் 25 மினி பஸ்கள் இயக்கப்படும். மேலும் வெளியூர் பஸ்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் நகரில் பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 13, 14, 16 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வருகையை பொறுத்து ஆகஸ்ட் 16-ம் தேதி இரவு 11 மணிவரை தரிசனத்துக்கு அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

முக்கிய பிரமுகர்கள், மிக முக்கிய பிரமுகர்களுக்கான அனுமதி சீட்டு வைத்துள்ளவர்களுக்கு நுழைவு வாயில் அருகே இருந்து வசந்த மண்டபம் வரை செல்வதற்கு தற்காலிக பாலம் அமைக்கப் பட்டுள்ளது.

அந்த வழியாக மக்கள் சிரமம் இல்லாமல் சென்று அத்திவரதரை தரிசிக்கலாம். மேலும் பக்தர்கள் வெளியேறும் 12 அடி பாதை 20 அடி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சுலபமாக தரிசனம் செய்துவிட்டு வெளியேறலாம்.

இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 17-ம் தேதி ஆகம விதிப்படி உரிய பூஜைகளைச் செய்து அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x