Published : 08 Aug 2019 01:26 PM
Last Updated : 08 Aug 2019 01:26 PM
சென்னை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பும் கட்சியினர், குறைந்தபட்ச நிதியாக ரூ.100 வழங்க வேண்டும் என, அக்கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், "மதிமுக பொதுச்செயலாளருக்கு, மதிமுகவினர் இனி யாரும் சால்வை அணிவித்தல் கூடாது. சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்குப் பதிலாக மதிமுகவுக்கு நிதி வழங்கலாம்.
மதிமுக பொதுச் செயலாளருடன்டன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்புவோர் குறைந்தபட்சம் நிதியாக ரூபாய் 100 வழங்க வேண்டும். மதிமுகவில் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யாதவர்கள், உடனடியாக வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மதிமுக தலைமைக் கழகச் செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் வாழ்நாள் உறுப்பினராக ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும்", என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று புகைப்படம் எடுக்க விரும்பும் கட்சியினர் கட்சிநிதி அளிக்கவேண்டும் என்கிற நடைமுறை சில கட்சிகளில் உள்ளது. மதிமுகவும் இதற்கு முன்ன்னரும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது மாநிலங்களவை உறுப்பினர் ஆனதால் அவரைக்காண கட்சிக்காரர்கள் அதிகம் வர வாய்ப்புள்ளதால் இம்முறையும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT