Published : 07 Aug 2019 05:54 PM
Last Updated : 07 Aug 2019 05:54 PM

இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு உணர்வுப்பூர்வமாக குரல் கொடுத்தவர் சுஷ்மா ஸ்வராஜ்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரங்கல்

பாஜக மூத்த தலைவரும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் (67), மறைவுக்கு இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

பாஜக மூத்த தலைவரும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் (67), உடல்நலக்குறைவு காரணமாக, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு காலமானார். அவரது மறைவுக்கு இலங்கையிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா ஸ்வராஜின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும்.

இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்காக உணர்வுபூர்வமாக குரல் கொடுத்த ஒரு தலைவர் அவர். சுஷ்மா ஸ்வராஜ் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இந்திய நாடாளுமன்ற குழுவிற்கு தலைமை தாங்கி இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அப்போது, இலங்கை தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பாக காத்திரமான அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தார். மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் இரா.சம்பந்தனுடன் இணைந்து விரைவில் அரசியல் தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

வெளியுறவு அமைச்சராக இருந்தபோது தமிழ் மக்களின் பிரச்சினையில் மிகக் கவனமாக செயற்பட்ட ஒரு தலைவராவார். குறிப்பாக இலங்கைக்கு வருகை தந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்க அவர் தவறியதில்லை.

கடந்த காலங்களில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோருடன் நானும் இந்தியா சென்றிருந்தேன்.

அப்போது இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடிக்கின்றமை தவறு என்று குறிப்பிட்டிருந்தார். அத்தோடு இவரது தலையீட்டிலேயே இழுவைப்படகுகள் முற்றாக தடை செய்யப்பட்டன. அவை தொடர்பான முழுமையான அறிக்கையும் இவரால் வெளியிடப்பட்டது.

தனது தரப்பில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் நியாயத்தின் பக்கம் நின்று அதற்காக போராடிய இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கின்றது" என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

-எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x