அத்திவரதரை வைக்கும் அனந்தசரஸ் குளத்தை தூர்வாரக் கோரி வழக்கு: அரசு வழக்கறிஞர்கள் ஆய்வு செய்ய உத்தரவு

அத்திவரதரை வைக்கும் அனந்தசரஸ் குளத்தை தூர்வாரக் கோரி வழக்கு: அரசு வழக்கறிஞர்கள் ஆய்வு செய்ய உத்தரவு
Updated on
1 min read

சென்னை

அத்திவரதரை தண்ணீருக்குள் வைக்கும் அனந்தசரஸ் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அரசு வழக்கறிஞர்கள் இருவர் நேரில் ஆய்வு செய்து குளம் சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாம்பலத்தைச் சேர்ந்த அசோகன் என்பவர் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர், கோயில் வசந்த மண்டபத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். முதலில் சயனக் கோலத்தில் அருள்பாலித்த அத்திவரதர் தற்போது நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்ட நிலையில், அனந்தசரஸ் குளத்தை ஆழமாக தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் ஏற்கெனவே அத்திவரதர் கோயில் குளத்தில் இருந்ததால் குளத்தை அதிகாரிகள் முறையாகத் தூர்வாரவில்லை. அத்திவரதர் சிலை இன்னும் சில நாட்களில் மீண்டும் குளத்தில் வைக்கப்படும் என்பதால் அதற்குள் அனந்தசரஸ் குளத்தை ஆழமாகத் தூர்வார அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண் டும். இப்போது செய்யாவிட்டால், அந்த குளத்தை தூர்வார இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண் டும். இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு நேற்று நடந்தது.

அப்போது அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அத்தி வரதர் சிலையை அனந்தசரஸ் குளத்தில் இருந்து எடுக்கும் முன் பாக அங்கிருந்த நீரை மீனுடன் சேர்த்து பொற்றாமரைக் குளத் துக்கு மாற்றிவிட்டோம். அதன் பிறகு அனந்தசரஸ் குளத்தில் இருந்த அனைத்து கழிவுகளும் அப்புறப்படுத்தப்பட்டு, முறையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனந்தசரஸ் குளத்துக்கு யாரும் செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, ‘‘அத்திவரதர் வைக்கப்பட உள்ள அனந்தசரஸ் குளம் மனுதாரர் கோரியுள்ளபடி முறையாக தூர்வாரி சுத்தம் செய் யப்பட்டுள்ளதா என்பதை அற நிலையத் துறை சிறப்பு அரசு வழக் கறிஞர் எம்.மகாராஜா, அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.கார்த்திகேயன் ஆகியோர் 7-ம் தேதி (நாளை) நேரில் ஆய்வு செய்து 8-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண் டும்’’ என நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in