கீழடி அகழாய்வில்  எலும்பில் செய்யப்பட்ட எழுத்தாணி கண்டுபிடிப்பு 

கீழடி அகழாய்வில்  எலும்பில் செய்யப்பட்ட எழுத்தாணி கண்டுபிடிப்பு 

Published on

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் இன்று (திங்கள்கிழமை) எலும்பில் செய்யப்பட்ட எழுத்தாணி கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கல்வியிலும் சிறந்து விளங்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இதை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வோடு நிறுத்தி கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல்துறை 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய் ஜூன் 13-ம் தேதி தொடங்கியது. கடந்த மாதம் மண்பாண்ட ஓடுகள், இரட்டை சுவர், நீளமான சுவர், அகலமான சுவர் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. 

நேற்று முருகேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உயரமான உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 6 உறைகள் உள்ளன. மேலும் கீழே தோண்டும்போது இன்னும் உறைகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். அதேபோல் கருப்பையா, முருகேசன், போதகுரு, மாரியம்மாள் ஆகியோரது நிலத்தில் மணிகள் உள்ளிட்ட அணிகலன்கள் கிடைத்துள்ளன. 

இந்நிலையில் இன்று விலங்கு எலும்பில் செய்யப்பட்ட எழுத்தாணி கண்டுபிடிக்கப்பட்டது.  எலும்பை நன்கு தீயில் வாட்டி, பக்குவப்படுத்தி எழுத்தாணியைத் தயாரித்துள்ளனர். இதை பயன்படுத்தி கல் போன்றவற்றில் எழுதியுள்ளனர்.

இதன்மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கல்வியிலும் சிறந்து விளங்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in