

வேலூர்
வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை ஓய்ந்த நிலையில், நாளை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதி யில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்ட தேர்தல், நாளை (5-ம் தேதி) நடைபெற உள்ளது. வரும் 9-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வேலூர் மக்களவை தேர்தலில் மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 பேர் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து ஆயிரத்து 351 பேரும், பெண்கள் வாக்காளர்கள் 7 லட்சத்து 31 ஆயிரத்து 99 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 105 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 30 அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குகளை சேகரித்தார்.
20 கம்பெனி துணை ராணுவம்
வேலூர் மக்களவை தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 1,600 பேர் கொண்ட 20 கம்பெனி துணை ராணுவப் படையினர் வரவழைக்கப் பட்டுள்ளனர். மேலும், 3 ஆயிரத் துக்கும் மேற்பட்ட காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க 114 பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
77 வழக்குகள் பதிவு
வேலூர் மக்களவை தொகுதி யில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதி மீறல் தொடர்பாக ஆம்பூரில் திரு மண மண்டபத்துக்கு 'சீல்' வைக் கப்பட்டது.
அந்த மண்டபத்தில் திருமண ஏற்பாடுகளை செய்திருப் பதாகக் கூறி சம்பந்தப்பட்ட ஒரு குடும்பத்தினர் மனு அளித்தனர். இதனை ஏற்று, நேற்று மாலை 6 மணி அளவில் தற்காலிகமாக 'சீல்' அகற்றப்பட்டு திருமணம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்ததும் மீண்டும் மண்டபத்துக்கு 'சீல்' வைக்கப்பட உள்ளதாக ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்தார்.
வேலூர் மக்களவை தொகுதிக் கான இறுதி கட்ட தேர்தல் பிரச் சாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிந்தது.
வேலூரில் அதிமுக சார்பில் இறுதிகட்ட பிரச்சாரமாக தொரப் பாடியில் தொடங்கி சத்துவாச்சாரி வரை வாகன பேரணி நடந்தது. திமுக சார்பில் வேலூர் மண்டித் தெருவில் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது.
இதில், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இருசக்கர வாகன பேரணி நடந்தது.
சத்யபிரத சாஹூ தகவல்
வேலூர் மக்களவைத் தொகுதி முழுவதும் கண்காணிப்பு அதிகரிக் கப்பட்டுள்ளது. தொகுதியில் மேற் கொள்ளப்பட்டுள்ள முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறும்போது, ‘‘உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.3 கோடியே 57 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.89 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 890 கிராம் தங்கம், ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 13 கிலோ 800 கிராம் வெள்ளி, 23 ஆயிரத்து 350 லிட்டர் மதுபானம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று, தொகுதி முழுவதும் 3 ஆயிரத்து 957 தமிழக போலீஸார், 1,600 துணை ராணுவப்படையினர், 400 ஊர்க்காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் ’’என்றார்.