Last Updated : 03 Aug, 2019 05:32 PM

 

Published : 03 Aug 2019 05:32 PM
Last Updated : 03 Aug 2019 05:32 PM

ஆடிப்பெருக்கை முன்னிட்டு சதுரகிரி செல்ல குவிந்த பக்தர்கள்: அனுமதி மறுக்கப்பட்டதால் பேருந்து சிறைபிடிப்பு

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு இன்று சதுரகிரி மலைக்குச் செல்ல பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அடிவாரப் பகுதியான தாணிப்பாறையில் குவிந்தனர். 

ஆனால் சதுரகிரி மலைக்குச் செல்ல வனத்துறை கேட்கப்படாமல் அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீஸார் மற்றும் வனத்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். 

ஆடி அமாவாசை திருவிழாவிற்காக கடந்த 27-ம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை மட்டுமே சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்றும் அதன்பின் வனத்துறை கதவு அடைக்கப்பட்டு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். 

இருப்பினும் ஆடிப்பெருக்கு விழாவிற்காக சுவாமி தரிசனம் செய்ய தங்களை அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் வாதிட்டனர். ஆனால் உரிய உத்தரவு தராமல் சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் சிற்றுந்து ஒன்றை சிறைபிடித்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் போராட்டத்தை கைவிட்டு ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x