Published : 03 Aug 2019 08:47 AM
Last Updated : 03 Aug 2019 08:47 AM

‘இந்து தமிழ்’ செய்தி பொதுநல வழக்கானது; தந்தை, மகன் கொலையில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கி.மகாராஜன்  

மதுரை

குளித்தலை அருகே நீர்நிலை  ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பொதுநலன் வழக்கு தாக்கல் செய்ய உதவிய தந்தை, மகன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான செய்தியை பொதுநலன் வழக்காக உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

கரூர் மாவட்டம் குளித்தலை முதலைப்பட்டியில் உள்ள குளத்தில்  ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தை மீட்கக் கோரி,  உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.  முதலைப்பட்டி கோயில் பூசாரி வீரமலை, அவரது மகன் நல்லதம்பி ஆகியோர் இந்த வழக்குக்கு உதவியாக இருந்துள்ளனர். இதனால் இவர்களை  ஒரு கும்பல் கடந்த  ஜூலை 29-ல் கொலை செய்தது.

இந்தக் கொலை தொடர்பாக  ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியானது. இந்த செய்தியை அடிப்படையாக வைத்து, உயர் நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன்வந்து பொதுநலன் வழக்கு ஒன்றை நேற்று விசாரணைக்கு எடுத்தனர்.

இது தொடர்பாக, உயர் நீதிமன்றக் கிளை பதிவாளர் தாக்கல் செய்த மனுவில், முதலைப்பட்டியில் 196 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தில் 157 ஏக்கர் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு பட்டா பெறப்பட்டது. தற்போது குளத்தில் எஞ்சியுள்ள 39 ஏக்கர் பரப்பையும் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதுதொடர்பான பொதுநல வழக்கில் அதிகாரிகளுக்கு உதவிய
தந்தையும் மகனும் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலையானவர்களின் குடும்பத் துக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இழப்
பீடு வழங்க வேண்டும். மேலும் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும்  உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நீர்
நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நீதிமன்றம் பலஉத்தரவுகளை பிறப்பித்த போதிலும், அந்த உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை. அதிகாரிகள் மெத்தனமாக நடந்து கொள்வதே நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம்.  உத்தரவை நிறைவேற்றாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முடியும் என்றனர்.

மேலும் இந்த வழக்கின் தற்போதைய நிலை தொடர்பாக டிஎஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட குளத்தின் மொத்த அளவு, எவ்வளவு பரப்பளவு ஆக்கிரமிப்பில் உள்ளது? ஆக்கிரமிப்பு இடங்களுக்கு எதன்அடிப்படையில் பட்டா வழங்கப்
பட்டது? என்பது குறித்து வருவாய் அலுவலர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை  ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x