

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீபிடம் சென்னையில் இருந்து வந்த குடியுரிமை அதிகாரி சேவியர் தன்ராஜ் விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.
கப்பலில் வைத்தே இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவுக்குப் பின்னரே அகமது அதீப் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படுவாரா இல்லை மாலத்தீவுக்கே திருப்பி அனுப்பப்படுவாரா என்பது உறுதியாகும்.
நடந்தது என்ன?
மாலத்தீவு அதிபராக அப்துல்லா யாமீன் பதவி வகித்து வந்தார். அப்போது துணை அதிபராக இருந்தவர் அகமது அதீப். யாமீனின் நெருங்கிய நண்பராக இருந்தார். ஆனால், ஆட்சியை கவிழ்க்க சதி செய்தததாக அதீப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு அதிபர் அப்துல்லா தனது மனைவியுடன் படகில் சென்று கொண்டிருந்தார். அப்போது படகில் குண்டு வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாமீன் உயிர்த் தப்பினார். மனைவி மற்றும் பாதுகாவலர்கள் 2 பேர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.
அதிபரை கொல்ல முயன்றதாக முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் (34) மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. படகில் குண்டு வெடித்தது குறித்து விசாரணை நடத்த எப்.பி.ஐ. அதிகாரிகள் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் தீவிர ஆய்வு செய்து படகில் வெடிகுண்டு எதுவும் வெடிக்கவில்லை என்று கூறினர்.
இந்நிலையில் வீட்டுக்காவலில் இருந்த அகமது அதிப் தலைமறைவானார். அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக இருந்தது.
அகமது அதிப் வெளிநாட்டுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்தநிலையில் தூத்துக்குடிக்கு வந்த சரக்கு ஏற்றி வந்த படகு ஒன்றில் அவர் பயணம் செய்வதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் தூத்துக்குடி விரைந்தனர். அவரை அடையாளம் கண்டு நடுக்கடலிலேயே இந்திய அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.