3 மாதங்களுக்குப் பிறகு 50 அடியை தாண்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம்

மேட்டூர் அணை: கோப்புப்படம்
மேட்டூர் அணை: கோப்புப்படம்
Updated on
1 min read

சேலம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 3 மாதங்களுக்குப் பிறகு 50 அடியை தாண்டியுள்ளது. 

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. தற்போது தென்மேற்குப் பருவமழையின் தீவிரம் சற்று குறைந்துள்ளதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், தமிழகத்திற்கு காவிரியில் வந்துகொண்டிருக்கிறது. இதனை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து, கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கலில் காவிரியில் நீர்வரத்து நேற்று மாலை விநாடிக்கு 10000 கன அடியாக அதிகரித்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மெயின் அருவி, சினிஃபால்ஸ் அருவி, ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின்  பாதுகாப்பு கருதி இன்றும் பரிசல் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு 9900 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (வெள்ளிக்கிழமை) விநாடிக்கு 10000 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையிலிருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால், அணையின் நீர்மட்டம் ஒருநாளைக்கு ஒரு அடி மேல் உயர்ந்து வருகிறது.

கடந்த 23-ம் தேதி 39.13 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், படிப்படியாக உயர்ந்து இன்று 50.15 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த மே மாதம் 14-ம் தேதி 50 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாகச் சரிந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணையின் நீர்மட்டம் 3 மாதங்களுக்குப் பிறகு 50 அடியை தாண்டியுள்ளது. 

இதனிடையே, இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in