Published : 02 Aug 2019 10:37 AM
Last Updated : 02 Aug 2019 10:37 AM
சென்னை
குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை ஒன்றுதான் உரிய தீர்வு என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கோவையில் கடந்த 2010-ம் ஆண்டு தனியார் பள்ளியில் பயின்ற சிறுமி, சிறுவன் என இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலையும் செய்யப்பட்டனர். இதில் அந்தப் பள்ளி வாகன ஓட்டுநர் மோகன்ராஜ், மனோகரன் இருவரும் காவல் துறையினரிடம் சிக்கினர். அப்பொழுது காவல்துறையை மீறி தப்பியோடிய மனோகரன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பாலியல் வன்கொடுமை செய்த வாகன ஓட்டுநர் மோகன்ராஜ் என்பவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதை வரவேற்று உச்ச நீதிமன்றத்திற்கு தேமுதிக சார்பில் நன்றிகளையும், பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே எங்கும் நடக்காத வண்ணம் போக்சோ சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டிருப்பதையும், உச்ச நீதிமன்றம் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்திருப்பதையும் வரவேற்று, மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும், நீதிபதிகளுக்கும், தேமுதிக சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை ஒன்றுதான் உரிய தீர்வு", என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT