நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை

நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சேலத்தை சேர்ந்த துணைநடிகர் பெஞ்சமின், தாக்கல் செய்துள்ள மனுவில், "தென்னிந்திய நடிகர்  சங்கத்துக்கு கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தன்னை ஓட்டுப் போட அனுமதிக்கவில்லை. தபால் மூலம் ஓட்டுப் போடுவது  என்பது விருப்பத்தின் அடிப்படையில் தான். அது கட்டாயம் கிடையாது.

மேலும், தபால் ஓட்டுப் படிவம் தேர்தலுக்கு முதல் நாள் வரை வந்தடையவில்லை. தபால் மூலமும், நேரடியாகவும் ஓட்டுப் போட முடியாத நிலை பல உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யவேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இதைப்போல் ஏழுமலை என்பவர் தொடர்ந்த வழக்கில் நடிகர் சங்க நிர்வாகிகள், பதவிக்காலம் முடிந்த நிலையில் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு இந்த தேர்தலை நடத்தியது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கை சிவில் வழக்காக தொடர்ந்திருந்தனர்.  

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். ஏற்கெனவே நடிகர் விஷால் தொடர்ந்த ரிட் வழக்கில் வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டாலும், முடிவுகளை வெளியிடக் கூடாது என்று  தடை விதித்து உத்தரவிடப்பட்டிருந்தது. விஷால் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணை ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ஆர்.பாலசரவணக்குமார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in