

சேலம்
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.92 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த அணைகளிலிருந்து காவிரியில் திறந்துவிடப்பட்டு, நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வருகிறது.
ஒகேனக்கலில் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 9,900 கன அடியாக உள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி, ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,200 கன அடியாக இருந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை நிலவரப்படி விநாடிக்கு 9,900 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. திறப்பைக் காட்டிலும், நீர்வரத்து பல மடங்கு அதிகமாக உள்ளதால், 120 அடி நீர்த்தேக்கம் அளவைக்கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 47.76 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 48.92 அடியாக உயர்ந்துள்ளது.