Published : 01 Aug 2019 07:09 AM
Last Updated : 01 Aug 2019 07:09 AM
சென்னை
இடைநீக்கத்தில் உள்ள அறநிலையத் துறை அதிகாரி கவிதா மீதான குற்றச்சாட்டு என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்வதற்கு காணிக்கையாக வழங்கப்பட்ட தங்கத்தில் முறை கேடு செய்ததாக அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் எம்.கவிதா கடந்த ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதையடுத்து கவிதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ரத்து செய்ய கோரிக்கை
அதில், ‘என் பணியிடை நீக்கத் துக்கான காரணத்தை தெளிவு படுத்தவில்லை. என் மீதான குற்றச்சாட்டு குறித்தும் அதில் கூறவில்லை. எனவே என்னுடைய பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி வி.பார்த்திபன் முன்பாக நடந்தது.
எந்த விளக்கமும் இல்லை
அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, “அதிகாரி கவிதா மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் மற்றும் விசாரணை அதிகாரியான ஆய்வாளருக்கு கோரிக்கை விடுத்தும், இதுவரை அவர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனால் அதிகாரி கவிதாவின் பணியிடை நீக்கத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக சட்ட ஆலோசனை வழங்க முடியாத சூழல் உள்ளது” என்றார்.
இதையடுத்து நீதிபதி வி.பார்த்திபன், ‘‘இதுதொடர்பாக சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் மற்றும் சம்பந் தப்பட்ட ஆய்வாளர் ஆகியோர் வெள்ளிக்கிழமை (ஆக.2) தங்களது விளக்கத்தை அறிக்கை யாக தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT