Published : 31 Jul 2019 11:28 AM
Last Updated : 31 Jul 2019 11:28 AM

அத்திவரதரை தரிசனம் செய்தார் ஓபிஎஸ்

இன்று, காஞ்சிபுரம் சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அத்திவரதரை தரிசனம் செய்தார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதர் சயனக் கோலத்தில் காட்சி தரும் நிகழ்வு இன்றுடன் (புதன்கிழமை) நிறைவு பெறுகிறது. நாளை முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கவுள்ளார். இதையொட்டி இன்று நண்பகல் 12 மணியுடன் கிழக்குக் கோபுரக் கதவுகள் மூடப்படும்.

மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவடைகிறது. மேலும், அத்திவரதரைக் காணவரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் அவர்கள் இளைப்பாறிச் செல்வதற்கான கொட்டகைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் காரணமாக, இன்று அதிக பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வருகை தந்தார். அவரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. ஆகியோர் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு, அத்திவரதருக்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்து வழிபட்டார். முக்கனிகள், மஞ்சள் நிறப் பட்டாடை, மலர் மாலை ஆகியவற்றை வைத்து ஓ.பன்னீர்செல்வம் வழிபட்டார். அவருடன் பொள்ளாச்சி ஜெயராமன், வைகைச்செல்வன் போன்ற அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x