Published : 30 Jul 2019 11:04 AM
Last Updated : 30 Jul 2019 11:04 AM

ஸ்டாலின் பூச்சாண்டி காட்டவேண்டாம்; திமுகவையே உடைத்துவிடுவோம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 

வேலூர் 

ஸ்டாலின் பூச்சாண்டி காட்டவேண்டாம் என்றும் அப்படிச் செய்தால் திமுகவையே உடைத்துவிடுவோம் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

வேலூர் மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரச்சாரத்தில் இன்று கலந்துகொண்டார். அப்போது தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், ''இந்த ஆட்சி, ஜெயலலிதா உயிரைக் கொடுத்து உருவாக்கிய ஆட்சி. குறுநில மன்னராக விளங்குகிற ஸ்டாலின் போன்றவர்கள், ஆட்சியை அகற்ற முயல்கின்றனர். அப்படி நடந்தால், புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி, அதிமுக தொண்டர்கள் 1 லட்சம் பேர் திரளுவர். திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களால் பேரவைக்குள் செல்ல முடியாது. ஒருவேளை உள்ளே வந்து, எங்களிடம் பிரச்சினை செய்துவிட்டு வெளியேற முடியாது. அத்தகைய நிலை, ஸ்டாலினுக்கு உருவாகும்.

ஆட்சியைப் பிடிக்கும் கனவெல்லாம் இங்கே நடக்காது. அந்தப் பூச்சாண்டியை எல்லாம் ஸ்டாலின், இங்கே காட்ட வேண்டாம். காட்டிப் பார்க்க வேண்டியதுதானே? சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்ததே. உள்ளே சென்றால் அத்தனையும் செய்துவிடுவோம் என்றார்களே!

அப்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டியதுதானே? திமுக கட்சியையே உடைப்போம். திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எத்தனை பேர் ஓட்டு போடுவர் என்று பார்ப்போம். ஸ்டாலின் இரண்டு அதிமுக எம்எல்ஏக்களுடன் போனில் பேசியிருக்கிறார். எங்களிடம் எத்தனை திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசியுள்ளனர் தெரியுமா?

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரட்டும். திமுக ஒன்று, இரண்டாகி விடும். கட்சியை இரண்டாக உடைத்து விடுவோம். அங்கிருந்து ஒரு குழு வெளியேற உள்ளது. ஸ்டாலின் தலைமை திமுகவில் யாருக்கும் பிடிக்கவில்லை'' என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. 
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x